ரிலையன்ஸுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இயலாது: பிரதமருக்கு வீரப்ப மொய்லி கடிதம்

இயற்கை எரிவாயு விலையை ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு 4.2 டாலர் என்ற விலையில் இருந்து 8 டாலருக்கு உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமானது முடிவு என்பதால் சர்ச்சை வெடித்தது.
இதுதொடர்பாக பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மீது குற்றம் சாட்டப்பட்டது. டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து வீரப்ப மொய்லி, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, முன்னாள் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசின் ஊழல் ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார்.
ஆனால் இதை நிராகரித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி 13 பக்க கடிதம் எழுதி உள்ளார். அதில் மொய்லி கூறியிருப்பதாவது:
பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் தலைமையிலான கமிட்டி பரிந்துரைப்படியே இயற்கை எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. இப்படி விலையை உயர்த்தாவிட்டால், இயற்கை எரிவாயு எடுக்கும் பணியில் முதலீடு உருவாகாது. உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு, வெளிநாட்டில் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை அதிக விலைக்கு வாங்க வேண்டி இருக்கும். அதை தவிர்க்கவே விலை உயர்த்தப்பட்டது.
ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த 2010-2011-ம் நிதி ஆண்டில் இருந்து, இலக்கை விட குறைவாக எரிவாயுவை எடுத்து வந்ததால் அந்நிறுவனத்துக்கு அப்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அபராதமாக 1.005 பில்லியன் டாலர் விதித்தார்.
உரிமம் பெற்ற நிறுவனம் தவறு செய்தால், அபராதம் விதிக்க ஒப்பந்தத்தில் இடம் இல்லை. ஒப்பந்தத்தை ரத்து மட்டுமே செய்ய முடியும். ஆனால், அபராதம் விதிக்கும் வழிமுறையில் ஜெய்பால் ரெட்டி சென்றார்.
அதை எதிர்த்து ரிலையன்ஸ் நிறுவனம் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் ரிலையன்சுடனான இயற்கை எரிவாயு எடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய இயலாது.
இவ்வாறு வீரப்ப மொய்லி தமது கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications