வன்முறை வெடித்த கிழக்கு டெல்லியில் 4வது நாளாக பதற்றம்.. ஊரடங்கு உத்தரவு அமல்- 14 பேர் கைது!
டெல்லி: வன்முறை வெடித்த டெல்லியின் கிழக்குப் பகுதியில் உள்ள திரிலோக்புரியில் 4வது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது. அங்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல்கள் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமையன்று தீபாவளி நாளில் நள்ளிரவில் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு இதைக் கட்டுப்படுத்தினர்.
ஆனாலும் மறுநாள் காலையில் இது பெரும் வன்முறையாக வெடித்தது. இரு பிரிவைச் சேர்ந்தவர்களும் கற்களை சரமாரியாக வீசித் தாக்கிக் கொண்டனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற மத்திய பாதுகாப்பு படையினர், இரு பிரிவினரிடையே அமைதி ஏற்படுத்த முயன்றனர். அப்போது நடைபெற்ற மோதலில் 20 போலீஸார் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த மோதலின்போது, அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

இதனால், திரிலோக்புரியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 3வது நாளாக நேற்றும் ஊரடங்கு அமலில் இருந்தது.
இந்த ஊரடங்கு உத்தரவால் அப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. ரூ.17 மதிப்புள்ள அரை லிட்டர் பாக்கெட் பால் ரூ. 60 வரை விற்பனையானது.

இதனிடையே அரசியல் ஆதாயத்துக்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த வன்முறை நடைபெறுகிறது என்றும் திரிலோக்புரியில் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சுனில் குமார் வைத்யா நடத்திய கூட்டம்தான் இந்த வன்முறைக்குக் காரணம் என்றும் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications