தேஜஸ்விக்கு எதிராக போர்க்கொடி... கட்சியினர் மீது லாலுவின் மூத்த மகன் பாய்ச்சல்!
பாட்னா: "என் தம்பி தலைமை பிடிக்காவிட்டால், கட்சியை விட்டு வெளியேறுங்கள்," என்று லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் ஆவேசமாக பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிக்கு பீகாரில் பெரிய அடி விழுந்துள்ளது. இதுவரை இல்லாத தோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருவதால், அவரது இளைய மகன் தேஜஸ்வி தலைமையிலான மெகா கூட்டணி தேர்தலை சந்தித்தது.

ஆனால், தேஜஸ்வி தலைமையிலான கூட்டணி பாஜகவிடம் மண்ணை கவ்வி உள்ளது. இந்த நிலையில், தேஜஸ்விக்கு எதிராக அக்கட்சியில் கலகக் குரல் எழுந்துள்ளது. அவரது கட்சியின் எம்எல்ஏ மகேஷ்வர் பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் தேஜஸ்விக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
லோக்சபா தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை தேஜஸ்வி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மகேஷ்வர் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.
யாதவர் சமூகத்தை சாராத மூத்த தலைவர் ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், வரும் 2020ல் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் நிச்சயம் படு தோல்வியை சந்திக்கும்," என்று கூறி இருக்கிறார். மகேஷ்வர் பிரசாத் யாதவின் கருத்து பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தனது தம்பி தேஜஸ்விக்கு எதிராக கட்சியினர் போர்க்கொடி தூக்கி இருப்பதை கண்டு கொந்தளித்துவிட்டார் அவரது சகோதரர் தேஜ் பிரதாப். அவர் கூறுகையில்,"எதற்காக அவர் (தேஜஸ்வி) எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்? தேஜஸ்வி பிரசாத் யாதவின் தலைமை பிடிக்காதவர்கள் கட்சியைவிட்டு வெளியேறலாம் என்று காட்டமாக பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து கேட்கப்பட்டதற்கு," அது முடிந்தபோன கதை. அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் முழு கவனத்தையும் நாம் செலுத்த வேண்டும். என் தம்பிக்கு கிருஷ்ணர் போல நான் உடன் இருப்பேன்," என்று கூறி இருக்கிறார். தம்பிக்கு ஆதரவாக தேஜ் பிரதாப் வரிந்து கட்டியிருப்பதால், தேர்தலுக்கு பின்னரும் பீகார் அரசியலில் அனல் பறக்கிறது.












Click it and Unblock the Notifications