டெரி நிர்வாக குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பாலியல் புகாரில் சிக்கிய பச்சௌரி
டெல்லி: பாலியல் புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல் ஆர்வலரான ஆர்.கே. பச்சௌரி எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தின்(டிஇஆர்ஐ) நிர்வாக குழு உறுப்பினர் பதவியை ராஜினமா செய்துள்ளார்.
எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தின்(டிஇஆர்ஐ) தலைவராக இருந்தவர் சுற்றுச்சூழல் ஆர்வலரான ஆர்.கே. பச்சௌரி. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டிஇஆர்ஐ நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் பச்சௌரி மீது பாலியல் புகார் அளித்தார். இதனால் காலவரையற்ற விடுப்பில் சென்ற பச்சௌரிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் பச்சௌரி மீது மேலும் ஒரு பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து பச்சௌரி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு டிஇஆர்ஐ நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் துணை தலைவர் பதவி உருவாக்கப்பட்டு அந்த பதவி பச்சௌரிக்கு அளிக்கப்பட்டது. மேலும் அவர் அந்நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே பச்சௌரி மீதான பாலியல் புகார் உண்மை என்பது துறை ரீதியான விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் பச்சௌரியை நிர்வாக குழு உறுப்பினர் பதவியில் இருந்து டிஇஆர்ஐ நிறுவனம் நீக்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பச்சௌரியோ தன்னை யாரும் நீக்கவில்லை நான் தான் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
டிஇஆர்ஐ நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பதவிப்பொறுப்பு 31.03.3016 அன்றுடன் முடிந்துவிட்டது. அதனால் நான் என் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். பிற விஷயங்களில் கவனம் செலுத்த உள்ளேன் என்றார்.
கடந்த 18ம் தேதி டிஇஆர்ஐ குழு கூடி முக்கிய முடிவு எடுத்துள்ளது. அப்போது தான் பச்சௌரியை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியுடன் எக்சிகியூட்டிவ் துணை தலைவர் பதவிக்காலமும் முடிவடைந்துள்ளது என்று பச்சௌரி தெரிவித்துள்ளார்.