கலவரமாக மாறிய சிறு விபத்து! குஜராத்தின் வதோதராவில் பெரிய வன்முறை.. நடந்தது என்ன? பரபர தகவல்
காந்தி நகர்: குஜராத்தின் வதோதரா நகரில் ஒரு சிறு சாலை விபத்து இரு தரப்பிற்கும் இடையேயான கலவரத்திற்கு வழிவகுத்த நிலையில், பல்வேறு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளது.
குஜராத்தின் வதோதராவில் நேற்றைய தினம் ஏற்பட்ட சிறு சாலை விபத்து வகுப்புவாத மோதலுக்குக் காரணமாக அமைந்தது. கலவரக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் ஒரு கோயில் மற்றும் சில வாகனங்களைச் சேதமடைந்தது.
இந்த கலவரத்தில் மூன்று பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 19 பேரைக் கைது செய்துள்ளனர்.

வன்முறை
இந்த வன்முறைச் சம்பவம் வதோதரா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதலில் 3 பேர் காயமடைந்ததாகக் கூடுதல் போலீஸ் கமிஷனர் சிராக் கொராடியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்பகுதியில் ஏற்பட்ட சிறு விபத்து ஒன்றே இந்த வன்முறைக்குக் காரணமாக அமைந்தது என்றும் இந்த விபத்து தொடர்பாகவும் போலீசார் மூன்று பேரைக் கைது செய்துள்ளதாக போலீார் தெரிவித்துள்ளனர்.

என்ன காரணம்
நகரின் ராவ்புரா பகுதியில் இரு வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களின் இரு சக்கர வாகனங்கள் மோதியதில் சிறு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே முதலில் சிறு விவாதம் ஏற்பட்டுள்ளது. அது அப்படியே பெரிதாகி, சிறிது நேரத்தில் ராவ்புரா பகுதிக்கு அருகில் உள்ள கரேலிபாக் பகுதியில் இரு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கற்களை வீசி மோதிக் கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் ஆக்ஷன்
மேலும், இரு பிரிவுகளில் ஒன்று அங்குச் சாலையோரத்தில் இருந்த சிலையையும் சேதப்படுத்தியது. இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில் இரண்டு ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் பல இரு சக்கர வாகனங்கள் சேதமைந்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த விபத்து மற்றும் கலவரம் தொடர்பாக ராவ்புரா மற்றும் கரேலிபாக் காவல் நிலையங்களில் இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிரடி கைது
கலவரத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது கரேலிபாக் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கூடுதல் போலீஸ் கமிஷனர் சிராக் கொராடியா கூறுகையில், "கலவரத்திற்காகக் காரணமான 19 பேரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரைப் பிடிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பதற்றம்
இந்த வன்முறை காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி உள்ள நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருந்த மாநில ரிசர்வ் போலீஸ் படையின் இரண்டு கம்பெனிகள் பதற்றமான பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும்,ரோந்து பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications