ரோகித் வெமுலாதான் எனக்கு முன் உதாரணம் - ஜேஎன்யு மாணவர் கன்யா குமார்
டெல்லி: ரோகித் வெமுலா தான் தனக்கு முன் உதாரணம் என்று தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் கன்யா குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜே.என்.யூ. பல்கலை வளாகத்தில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளை வீரவணக்க நாளாக மாணவர்கள் அனுசரித்தனர். இந்நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பியதாக அந்த பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமார் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் அவருக்கு 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர் திகார் சிறையில் இருந்து கன்யா குமார் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார்.
இதன் பின்னர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், நான் அரசியல்வாதி அல்ல, மாணவன். தேசிய அரசியலில் இணையும் எண்ணமோ, தேர்தலில் போட்டியிடும் எண்ணமோ இல்லை. ஒரு மாணவனாக கேள்வி கேட்கவும், எதிர்காலத்தில் ஓர் ஆசிரியனாக பதிலளிக்கவும் விரும்புகிறேன்.
நாட்டு மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை, பல்கலைக்கழக மாணவர்கள்தான் வாக்களித்தனர். நான் இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் அல்ல; ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர். நான் மாணவர்களைப் பற்றியும், அவர்களுக்காகவும் மட்டுமே பேசுவேன்.
என்னைப் பொறுத்தவரையில் சட்டப்படி தண்டிக்கப்பட்ட அப்சல் குரு இந்நாட்டின் குடிமகன். அளிக்கப்பட்ட தண்டனை சரியா, தவறா என யார் வேண்டுமானாலும் விவாதிக்கலாம். அதற்கு சட்டம் அனுமதிக்கிறது. அப்சல் குரு எனது வழிபாட்டுக்கு உரியவர் அல்ல. ரோகித் வெமுலாதான் எனக்கு முன் உதாரணம் என்றார்.












Click it and Unblock the Notifications