மூளையில் ரத்தக்கட்டு.. பாஜக எம்.பி. ரூபா கங்குலி மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.ரூபா கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா: நடிகையும், பா.ஜ.க. எம்.பி.,யுமான ரூபா கங்குலி மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல நடிகை ரூபா கங்குலி. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மகாபாரதம் தொலைக்காட்சித் தொடரில் திரௌபதியாக நடித்து லட்சக்கணக்கான மக்களை கவர்ந்தவர். பல இந்தி மற்றும் வங்காள மொழி நாடகங்கள், திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதனிடையே நவ்ஜோத் சிங் சித்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அவரது இடத்தில் ரூபா கங்குலி நியமிக்கப்பட்டார். மேற்கு வங்க பாஜக மகளிர் அணித்தலைவராகவும் பணியாற்றி வருகிறார் ரூபா கங்குலி.
இந்நிலையில் இன்று அவருக்கு மூளையில் ரத்த அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைக்கு அவரை மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.