பயணிகளே இல்லாமல் புறப்பட்ட சிறப்பு ரயில்... ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் ரூ. 16 லட்சம் நஷ்டம்!
லக்னோ: ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் மும்பையில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் லக்னோவுக்கு பயணிகள் இன்றி காலியாக வந்து சேர்ந்தது. இதனால், ரயில்வேக்கு ரூ. 16 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 12ம் தேதி மாலை 4.20 மணிக்கு மும்பையில் இருந்து லக்னோவுக்கு லோக்மான்ய திலக் ஏசி சிறப்பு ரயில் இயக்கப் பட்டது. இந்த ரயிலில் முதல் வகுப்பு, ஏசி இரண்டாம் வகுப்பு, ஏசி மூன்றாம் வகுப்பு என மொத்தம் 900 படுக்கைகள் இருந்தது.

இந்த சிறப்பு ரயில் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகத் தான், அதன் டிக்கெட் விற்பனையை ரயில்வே துவங்கியது. அதாவது மதியம் 1 மணிக்கு டிக்கெட் விற்பனை துவக்கப் பட்டது. அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மதியம் இரண்டு மணியோடு டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடப்பட்டன.
இதனால், பயணிகளால் இந்த சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்ய இயலவில்லை. பயணிகளே இல்லாமல் இந்த ரயில் மும்பையில் இருந்து புறப்பட்டு லக்னோ சென்றடைந்தது. இதனால், ரயில்வேக்கு ரூ. 16 லட்சம் இழப்பு ஏற்பட்டது.
இந்த இழப்பிற்குக் காரணம் ரயில்வே ஊழியர்களின் அலட்சியம் தான் என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறப்பு ரயில் குறித்த விவரங்களை கம்யூட்டரில் முன்கூட்டியே ஊழியர்கள் பதிவேற்றம் செய்யவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications