தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த மணிவண்ணனின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி... தமிழக அரசு
ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர் மணிவண்ணனின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். நான்கு வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ராணுவ வீரர் மணிவண்ணன் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த நாய்க் திபாக் மைதி என்ற மற்றொரு ராணுவ வீரர் ஒருவரும் உயரிழந்தனர். உயிரிழந்த ராணுவ வீரர் மணிவண்ணன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வேப்பனந்தல் கிராமத்தை சேர்ந்தவர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்தில் சேர்ந்தார். இன்னும் 4 நாள்களில் ஊருக்கு வருவதாக தெரிவித்திருந்த மணிவண்ணன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் திங்கள்கிழமை சொந்த ஊருக்கு வந்தடையும்.
ஜம்முவில் தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து தகவலறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கையில், இறந்த மணிவண்ணனின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மணிவண்ணனின் மரணத்தால் வேப்பனந்தல் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.












Click it and Unblock the Notifications