மக்கள் வாரி வழங்கியது ரூ.514 கோடி! மவுனம் காக்கும் மத்திய அரசு : தொடரும் வயநாடு சோகம்
கேரளா: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவே இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி இரவு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை, பூஞ்சேரி மட்டம், மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளரிமலா, பொத்துகலு உள்ளிட்ட பல கிராமங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு மண்ணுக்குள் புதைந்துப்போயின. இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி சுமார் 360 பேர் இறந்துவிட்டதாக கேரள அரசு அறிவித்திருந்தது. மேலும் 200க்கும் மேற்பட்டோர் நிலை என்னஆனது என்றே தெரியவில்லை என்றும் தெரிவித்திருந்தது. இந்த விபத்தில் அடையாளம் காண முடியாத சுமார் 166 உடல் பாகங்களும் கண்டு எடுக்கப்பட்டன.

ஒட்டு மொத்தமாக சுமார் 4,833 பேர் இந்நிலச்சரிவில் பாதிக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டு இருந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக மீட்புப் பணியில் பேரிடர் குழு ஈடுபட்டது. அதிநவீன ரேடார்கள், ஆளில்லா விமானங்கள், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்றன. உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தேடுதல் படலம் ஒரு தொடர்கதையாக நடைபெற்றது.
இந்தப் பேரழிவைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து பார்வையிட்டிருந்தார். டெல்லியிலிருந்து கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடு போனார். பின்னர் மேப்பாடி பஞ்சாயத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.
வயநாடு, முண்டக்கை, பூஞ்சேரி மட்டம், சூரல்மலை எனப் பகுதிகளில் மட்டும் மீட்பு பணிகள் 20 நாட்கள் நடைபெற்றன. முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகள் முழுக்க தரைமட்டமாகிவிட்டது என மீட்பு படையினர் கூறியிருந்தனர். இங்கே 400 வீடுகள் இருந்த பகுதியில் 30 வீடுகள் மட்டுமே மிஞ்சி உள்ளன என்றும் கூறியிருந்தனர்.
இந்தப் பேரிடரிலிருந்து கேரளாவை மீட்க மக்கள் நிதி உதவி அளிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டிருந்தார். ஆகவே, உலகம் முழுவதும் உள்ள மனிதநேயமிக்க பொதுமக்களிடம் இருந்து இதுவரை முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.514.14 கோடி நன்கொடையாகக் கிடைத்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் இப்போது சட்டசபைக் கூட்டத்தில் பேசுகையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தனது உரையில் பினராயி விஜயன், மலப்புரம் பேரிடர் தளம், சாலியாற்றிலிருந்து மொத்தம் 231 சடலங்களும், 222 அடையாளம் தெரியாத உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆறு குழந்தைகள் உட்பட மொத்தம் 21 பேர் அனாதைகளாக மாறியுள்ளனர் என்றும் 173 சடலங்கள், இரண்டு உடல் பாகங்கள் மட்டுமே உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், "53 சடலங்களும், 212 உடல் உறுப்புகளும் புதுமலை பொது மயானத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. சுமார் 451 உடல்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் 64 உடல்கள் அடையாளம் காணப்பட்டன. 47 பேரை இதுவரை காணவில்லை. மொத்தம் 145 வீடுகள் முழுமையாகவும், 170 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. கிட்டத்தட்ட 183 வீடுகளும் 19 ஹெக்டேர் வனப்பகுதியும் மண் சரிவினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் இந்திய வரலாற்றில் இது மிகப்பெரிய நிலச்சரிவுகளில் இதுவும் ஒன்று என்றும் இதனால் 1,200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
"இதுவரை மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு (SDRF) கூடுதல் உதவி வழங்குமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தோம். பிரதமரிடம் உதவி கோரினோம். சேதங்கள் பற்றி விரிவான குறிப்பானைச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் மத்திய அரசிடம் இருந்து எந்தச் சிறப்பு உதவியும் கிடைக்கவில்லை"என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications