ஜெகனின் புகழ் போதையால் ரூ.700 கோடி வீண்? நாயுடு வெளியிட்ட ஆதாரம்! ஆந்திராவில் வீசும் புயல்
அமராவதி: நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பட்டா பாஸ்புக்கில் ஜெகன்மோகன் ரெட்டி தனது புகைப்படத்தை விளம்பர மோகத்தில் அச்சிட்டு மக்களின் வரிப்பணம் சுமார் ரூ.700 கோடியை வீணடித்துள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
ஆந்திர முதலமைச்சராகப் பதவியேற்றதிலிருந்து ஜெகன்மோகன் ரெட்டி மீது பல்வேறு ஊழல் புகார்கள் முன்வைத்து வருகிறார் சந்திரபாபு நாயுடு. இப்போது ஜெகன் முதல்வராக இருந்த காலகட்டத்தில் மக்களின் வரிப்பணம் சுமார் 700 கோடி ரூபாய் வீணாக விரயம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் நாயுடு. அந்தக் காணொளியை தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் ஜெகனுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் #700CrWastedByJagan என ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்டு செய்து வருகின்றனர்.

கடந்த 2024 ஆந்திர சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. ஆளும் கட்சியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியைப் பறிகொடுக்க நேர்ந்தது.
ஜெகன் ஆட்சியில் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்ட நாயுடு இப்போது ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் ஜெகன்மோகன் ரெட்டியை அரசியல் களத்திலிருந்து வெளியேற்றுவதற்காக வேலைகளை தொடங்கி இருக்கிறார். இதனால் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் இடையே ஒரு மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
சந்திரபாபு நாயுடு தலைமையில் புதியதாக அமைந்துள்ள ஆந்திரப் பிரதேச அரசு அதிகாரப்பூர்வ அரசு முத்திரையுடன் கூடிய நில உரிமையாளர்களுக்குப் பட்டா பாஸ்புக்குகளை விரைவில் வழங்க முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பை நாயுடு வெளியிட்டிருந்தார். ஆனால், இந்த பட்டா பாஸ்புக்களை வழங்குவதில் ஒரு சிக்கல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவரது ஆட்சிக் காலத்தில் இந்தப் பட்டா பாஸ்புக்குகளில் தனது புகைப்படங்களைப் போட்டு அச்சிட்டிருந்தார். மேலும் நில அளவையைக் குறிப்பதற்காக நடப்பட்டு இருந்த கற்களில் ஜெகன் அவரது புகைப்படத்தைப் பதித்திருந்தார். அவற்றை நீக்கிவிட்டு, அரசு முத்திரையுடன் மட்டுமே பாஸ்புக் வழங்கப்படும் என்று நாயுடு இப்போது உறுதியளித்துள்ளார்.
கடந்த 29 ஆம் தேதி அன்று, அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு பேசிய நாயுடு, ஜெகன் தனது புகைப்படங்களை பாஸ்புக்கில் அச்சிடுவதற்காக மட்டுமே சுமார் 15 கோடி ரூபாயை வீணடித்துள்ளார் என்று கூறியுள்ளார். "தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி, மக்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரப்பூர்வமான அரசு முத்திரையுடன் கூடிய பட்டா பாஸ்புக்குகளை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதிகாரிகள் முன்பே அதிகாரப்பூர்வ பாஸ் புக் மாதிரியைச் சமர்ப்பித்துள்ளனர். அதேபோல் புதிய புத்தகம் வழங்கப்படும்” என்று மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாஸ் புக்கில் உள்ள கியூஆர் கோடு ஸ்கேன் செய்தால், ஒருவரின் சொத்து விவரங்கள், முகவரி, நில வரைபடம் அனைத்தையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். முந்தைய அரசு இதற்காக அதிகளவில் நிதி செலவு செய்தது.
புதிய பாஸ்புக்குகளை அறிவித்த நாயுடு, "மறு ஆய்வுக்கான திசைகளில் கற்கள் பதிக்கும் விவகாரம் குறித்து மத்திய அரசு ஒருபோதும் எந்த வழிகாட்டுதல்களையும் வழங்கவில்லை. ஆனால் ஜெகன் தனது படங்களை கிரானைட் கற்களில் செதுக்கியுள்ளார்.
இதற்காக 74.6 லட்சம் நில அளவைக்கான கிரானைட் கற்களில் ஜெகனின் படம் செதுக்கப்பட்டுள்ளது. அதை வைத்து என்ன செய்வது என்பது குறித்து அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது. இந்தக் கற்களிலிருந்து படங்களை நீக்க வேண்டும் என்றால் மேலும் ரூ.15 கோடி செலவு செய்ய வேண்டும். ஜெகனின் சுய விளம்பர தாகத்தால் ரூ.700 கோடி பொதுமக்களின் பணம் வீணாகி இருக்கிறது" என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாநிலக் கல்வி அமைச்சர் நாரா லோகேஷ், அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். பட்டா பாஸ்புக்களில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முத்திரை மட்டுமே இடம் பெறும் என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும் மாநிலத்தை ஜெகன் எப்படி நிதி நெருக்கடியில் சிக்க வைத்துள்ளார் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். நாரா லோகேஷ் தனது பதிவில், "அன்புள்ள ஆந்திரா மக்களே, உங்கள் நில பட்டா பாஸ்புக்கில் இனி ஆந்திர அரசின் ராஜமுத்ரா மட்டுமே இருக்கும்.
முந்தைய YSRCP அரசு நமது மாநிலத்தை நிதி நெருக்கடியில் ஆழ்த்தி இருப்பது மட்டுமல்லாமல், உங்கள் நில பாஸ்புக் உட்பட எல்லா இடங்களிலும் 'கோடாரி' முதலமைச்சரின் படத்தை அச்சிட ரூ. 700 கோடி செலவழிந்துள்ளது. இது உங்களின் பணம். அது வீணாகியுள்ளது. எங்களது என்.டி.ஏ அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது. உங்கள் நிலங்களையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது. நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை எங்களின் வாக்குறுதியை உறுதியாக நிறைவேற்றுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications