‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ. 9,000 கோடி ஒதுக்கீடு
டெல்லி: பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ. 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. எனவே, அதற்குள்ளாக மகாத்மாவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியாவை நினைவாக்க மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கென கடந்த 2014ம் ஆண்டு மகாத்மாவின் பிறந்தநாளன்று தூய்மை இந்தியா என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை தூய்மையானதாக மாற்ற, மக்கள் திட்டமாக மாற்றி இதனை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு கட்டமாக புனித நதிகளுள் ஒன்றான கங்கையை தூய்மைப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், நாடு முழுவதும் அனைவருக்கும் கழிப்பறை என்ற திட்டமும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. அதில், பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கென ரூ. 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் நிதி மட்டுமின்றி, பல தனியார் அமைப்புகளும் இந்தத் திட்டத்திற்கென நிதி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications