கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வெட்டி படுகொலை: மாநிலம் தழுவிய முழு அடைப்பு!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷ் ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(33). அவர் சனிக்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு இரவு 8.30 மணிக்கு வீட்டிற்கு திரும்பி சென்றார்.
அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் 6 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால் தாக்கியது. அந்த கும்பல் ராஜேஷின் இடது கையை துண்டாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ராஜேஷை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியினர்தான் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ராஜேஷின் கொலை சம்பவத்தை கண்டித்து கேரளாவில் இன்று முழுஅடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்தது.
இன்று காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் அனைத்தும் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.