மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்துங்கள்..பசுக்களை தத்தெடுத்துங்கள்.. மீண்டும் சர்ச்சையில் ஆர்.எஸ்.எஸ்
இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை உடனே நிறுத்திவிட்டு, பசுமாடுகளைத் தத்தெடுத்து வளர்க்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை உடனடியாக நிறுத்திவிட்டு,பசு மாடுகளைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது மீண்டும் மத்தியில் ஆளும் பாஜக அரசை நெருக்கடிக்குத் தள்ளியிருக்கிறது.
ஏற்கெனவே கடந்த 3 ஆண்டுகளாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மாட்டிறைச்சி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர். அதனால் பல இடங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் மீண்டும் ஆர்எஸ்எஸ் இந்த விவாதத்தைக் கையெடுத்துள்ளது ஆபத்தானது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். நாட்டு வளர்ச்சிக்கு நிறைய செயல்படவேண்டிய நேரங்களில் இதுபோன்ற விஷயங்களில் மக்களின் கவனத்தைத் திசை திருப்பவதால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
மத இணக்கமும் தேச ஒற்றுமையையும் உள்ள நாட்டில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இதுபோல பேசுவதுதான் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அமைந்துவிடுகிறது என்றும் கூறும் சமூக ஆர்வலர்கள், 'வேற்றுமையில் ஒற்றுமை'என்பதைக் கடைபிடிக்க அவர்கள் முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
மாட்டிறைச்சித் தொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள இந்திரேஷ் குமார். ''இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில்கூட, மாட்டிறைச்சி அதிகம் உண்ணப்படவில்லை. இஸ்லாமிய மன்னர்கள் பலரும் பசுக்களைப் புனிதமாக வழிபட்டுள்ளனர்,'' எனக் கூறினார்.
மேலும் இந்திரேஷ் குமார் , ''தற்போது பலர் மாட்டிறைச்சி உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது மிகவும் வேதனை தருகிறது. இந்த வழக்கத்தை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்,'' என்றார். அத்துடன் குறிப்பாக இஸ்லாமிய மக்கள், மாட்டிறைச்சி உண்பதைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக பசு மாடுகளை தத்தெடுத்து, அவர்கள் வளர்த்தார்கள் எனில், அவர்களை யாரும் தாக்கமாட்டார்கள். மாடுகளின் மீது இஸ்லாமிய மக்கள், பரிவும், பாசமும் காட்ட வேண்டும். இப்படிச் செய்தால், அது இந்தியாவில் மிகப்பெரிய கலாசார புரட்சியாக அமையும்,'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.