டி.டியில் முதல் முறையாக ஆர்எஸ்எஸ் தலைவர் உரை நேரடி ஒளிபரப்பு- காங், இடதுசாரிகள் கொந்தளிப்பு
நாக்பூர்: விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரையை தூர்தர்ஷனில் ஒளிபரப்பியதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் மத்திய அரசை இயக்குவதாக கூறப்பட்டு வருகிறது.
1925 முதல்..
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் விஜயதசமி விழா மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்றது. கடந்த 1925-ம் ஆண்டு முதல் இந்த விஜயதசமி விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நேரடி ஒளிபரப்பு
தற்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் விஜயதசமி விழாவில் அதன் தலைவர் மோகன் பகவத் உரையாற்றியது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் எதிர்ப்பு
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சந்தீப் தீக்ஷித் கூறுகையில், இது மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசு நிறுவனம் நடுநிலையோடு செயல்படக் கூடியது. தற்போது அதன் நடுநிலைத் தன்மை மீறப்பட்டுள்ளது என்றார்.
சல்மான் குர்ஷித்
முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு இப்படி முன்னுரிமை கொடுத்திருப்பது என்பது ஏற்க முடியாத ஒன்று என்றார்.
டி. ராஜா
கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊதுகுழலாக தூர்தர்ஷன் மாற்றப்பட்டது குறித்து தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
டிடி விளக்கம்
இதனிடையே தூர்தர்ஷனின் இயக்குநர் அர்ச்சனா தத்தா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மற்றைய செய்தி நிகழ்வுகளைப் ஒளிபரப்பு செய்தது போல ஆர்.எஸ்.எஸ். இயக்க நிகழ்வையும் செய்தியாக ஒளீபரப்பினோம் என்று விளக்கம் அளித்துள்ளார்.