தேசவிரோத சக்திகளின் புகலிடமாக டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகம்... சொல்வது ஆர்.எஸ்.எஸ்.
டெல்லி: தேசவிரோத சக்திகளின் புகலிடமாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் திகழ்வதாக ஆர்.எஸ்.எஸ். சாடியுள்ளது. இந்த விமர்சனத்துக்கு ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ஏடான 'பஞ்சன்யா'வில் எழுதப்பட்டுள்ள கட்டுரை:
ஒருங்கிணைந்த இந்தியாவை துண்டாட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் முன்னின்று செயல்படுகிறது. இங்குள்ள மாணவர்கள் சங்கம், முழுக்க முழுக்க நக்சல் அமைப்புடன் தொடர்புள்ளவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
2010ல் தண்டேவாடாவில் சிஆர்பிஎஃப் போலீசாரை நக்சல்கள் தாக்கி படுகொலை செய்ததை வெளிப்படையாகவே கொண்டாடிய மாணவர் சங்கம் இங்குதான் செயல்படுகிறது.
காஷ்மீரில் இருந்து ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேச துரோக நடவடிக்கைகளுக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் உடந்தையாக இருக்கிறது.
இவ்வாறு பஞ்சன்யாவில் எழுதப்பட்டுள்ளது.
கடும் கண்டனம்
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இந்த விமர்சனத்துக்கு டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத், காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி ஆகியோரும் இந்த விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பஞ்சன்யா மீது ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகம் அவதூறு வழக்கைத் தொடர வேண்டும் என்றும் திவாரி வலியுறுத்தியுள்ளார்.