உ.பி, பீகாரில் ஆதரவு அலை தேய்ஞ்சுகிட்டே போகுதே..: பா.ஜ.க.வை எச்சரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.!!
டெல்லி: பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தமது ஆதரவு தளத்தை இழந்து வருவதாக அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் வீட்டில் பாரதிய ஜனதா -ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, பொதுச்செயலாளர்கள் ராம் லால், ராம் மாதவ், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலர் சுரேஷ் பையாஜி ஜோஷி, இணை பொதுச் செயலர்கள் கிருஷ்ணா கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்படுவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் ஆர்.எஸ்.எஸ். எதிர்பார்ப்புகளுக்கு அமைய மத்திய அரசு செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற்றால் பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தளத்தை இழக்கும் என தகவல்கள் கிடைத்திருப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சுட்டிக் காட்டினர்.
மேலும் இந்த மாநிலங்களில் இந்துக்களின் வாக்கு வங்கியைத் தக்க வைக்க அனைத்து மாவட்டங்களிலும் நல்லிணக்க கூட்டங்களை நடத்தவும் பாரதிய ஜனதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தியுள்ளது. பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வி, நில ஆர்ஜித மசோதா, பலவீனமான மாநிலங்களில் பாரதிய ஜனதாவை வலுப்படுத்துதல், யோகா நாள், அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் விழா ஆகியவற்றை நடத்துதல் உள்ளிட்டவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications