தமிழ்நாடு உள்ளாட்சி பதவியேற்பில் பல இடங்களில் தகராறு: அடிதடி, கூட்டணிக்கு ஒதுக்கிய இடத்தில் போட்டி
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மார்ச் 2-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் மாநகராட்சி மேயர் துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இதில் பல இடங்களில் சண்டைகள், தகராறுகள் ஏற்பட்டன.
காயமடைந்த காவல்துறை
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக மற்றும் அதிமுக போட்டியிட்டன. ஆனால், அதிமுக தரப்பில் பெரும்பான்மை கவுன்சிலர்கள் இருந்தனர்.
பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. அதில், திமுக, அதிமுக தரப்புக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டுமென்று திமுகவினர் போராட்டம் செய்தனர்.
அப்போது அங்கு காவலில் இருந்த போலீசார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடைய தூண்டுதலின் பேரில், அதிமுகவுக்குச் சாதகமாக நடந்துகொண்டதாக திமுகவினர் குற்றம் சாட்டினர்.
- தமிழக மேற்கு மண்டல மாநகராட்சி பதவி வேட்பாளர்கள் - ஆச்சரியத்தில் திமுகவினர்
- சென்னை, மதுரை, கோவை, திருச்சி மேயர்கள் யார்? கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஒதுக்கிய இடங்கள் எவை?
இந்தச் சம்பவத்தின் போது அதிமுக மற்றும் திமுக தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு திமுகவினருக்கு மண்டை உடைந்தது. மேலும் ஒரு பெண் காவலர் உட்பட 8 போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து திமுகவினர் அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, "எங்கள் மீது அதிகமுகவினர் தூண்டுதலின் பேரில் தான், எங்கள் மீது இந்தத் தாக்குதலை காவல்துறையினர் நடத்தியுள்ளனர். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு, அன்னவாசல் பேரூராட்சித் தலைவர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும்," என்று மறியலில் ஈடுபட்டிருந்த திமுகவினர் கூறினர்.
அவர்களுக்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர், "இந்தக் கோரிக்கையை முதலமைச்சர் வரை கொண்டு சென்று, இந்தச் சம்பவம் உண்மையாகவே முன்னாள் அமைச்சர் தூண்டுதலின் பேரில் நடந்திருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் ஆலோசிப்போம்," என்று கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திமுகவினர் கலைந்து சென்றனர்.
இதற்குப் பிறகு மீண்டும் அன்னவாசல் பேரூராட்சியின் தேர்தல் நடைபெற்ற போது, அதிமுகவைச் சேர்ந்த சாலை பொன்னம்மாள் என்பவர் பேரூராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய பகுதியில் திமுக போட்டி
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேனி அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் ரேணுப்பிரியா வெற்றி.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன.
இதில் திமுக 19 வார்டுகளிலும், அதிமுகவினர்7 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சியினர் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். அவர்களைத் தொடர்ந்து, அமமுக மற்றும் சுயேட்சை தலா இரண்டு வார்டுகள், பாஜக ஒரு வார்டு என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளனர்.
தேனி - அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தேனி - அல்லிநகரம் நகர் மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அந்தக் கட்சி சார்பாக 22வது வார்டு கவுன்சிலர் சற்குணம் என்பவர் நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்ற நகர் மன்ற தலைவர் பதிவுக்கான மறைமுக தேர்தலில் 10வது வார்டில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா மனுத்தாக்கல் செய்தார்.
இதனால் நகர்மன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் போட்டியிட இருந்த காங்கிரஸ் கவுன்சிலர் சற்குணம் தேர்தலை புறக்கணித்து வெளியே வந்தார்.
பின்னர், நகர் மன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததில் திமுக வேட்பாளர் ரேணுப்பிரியா வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்.
மறைமுகத் தேர்தலுக்கு வராத திமுக கவுன்சிலர்கள்
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் போதிய உறுப்பினர்கள் வராததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 7 வார்டுகளிலும் அதிமுக 7 வார்டுகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற தேர்தலின்போது அதிமுக வார்டு உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். திமுக வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் குமார் ஆகிய 8 பேரும் வரவில்லை. போதிய எண்ணிக்கையில் வார்டு உறுப்பினர்கள் வருகை தராத காரணத்தால் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக பேரூராட்சி செயல் அலுவலரும் தேர்தல் அலுவலருமான மயில்வாகனன் அறிவித்தார்.
மேலும் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல், தேர்தல் ஆணையம் அறிவிக்கும் மற்றொரு தேதியில் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
தேர்தல் ஒத்திவைப்பு
கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுக தேர்தல் நடைபெற இருந்த இன்று அதிமுக, திமுக இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னையால் தேர்தல் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் அதிமுக வென்ற ஒரே பேரூராட்சி வெள்ளலூர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேனியில் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளருக்கு போட்டியாக நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு.
உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில், திமுக அறிவித்த வேட்பாளர் க.செல்விக்கு எதிராக மற்றுமொரு திமுக வேட்பாளர் சகுந்தலா விருப்ப மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் திமுக அறிவித்த செல்வியின் ஆதரவாளர்கள் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் ஏற்பட்ட கூட்டணி குழப்பம்
திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று திமுகவினர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து தலைவராக அறிவித்துக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தாக்கப்பட்டதாகவும் கட்சி உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டதாகவும் அக்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய தொகுதி பங்கீட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி நகராட்சி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான தேர்தல் இன்று நடைபெற இருந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து திமுகவின் சூலூர் ஒன்றிய பொறுப்பாளர் மனோகரன் போட்டியிட்டார்.இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த மனோகரன் 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் உள்ள மொத்தம் 8 வார்டுகளில் திமுக மற்றும் அதிமுக 4க்கு 4 என்ற விகிதத்தில் சம பலத்தில் உள்ளன.
இந்நிலையில் பேரூராட்சி தலைவர் தேர்தலை திமுக புறக்கணித்த காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
- யுக்ரேன் - ரஷ்யா மோதலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவீர்கள்?
- காலநிலை மாற்றம்: ஐபிசிசி அறிக்கை தரும் 5 முக்கிய பாடங்கள்
- தமிழக மேற்கு மண்டல மாநகராட்சி பதவி வேட்பாளர்கள் - ஆச்சரியத்தில் திமுகவினர்
- ஐ.நாவில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காதது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
















Click it and Unblock the Notifications