பங்குனி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மார்ச் 14-ல் திறப்பு
பம்பை: பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 14-ந் தேதி திறக்கப்பட உள்ளது. மார்ச் 19-ந் தேதி ஐயப்பன் கோவில் பங்குனி ஆறாட்டு திருவிழா தொடங்க உள்ளது.
மகர ஜோதிக்குப் பின்னர் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது. 5 நாட்கள் திறக்கப்பட்ட நிலையில் பிப்.17-ல் நடை சாத்தப்பட்டது.
இதையடுத்து பங்குனி மாத பூஜைக்காக வரும் 14-ந் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். அதன் பின்னர் மார்ச் 19-ல் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்கும்.
இதன் ஒருபகுதியாக மார்ச் 27-ல் சரம்குத்தியில் பள்ளிவேட்டை, 28-ந் தேதியில் பம்பையில் ஆறாட்டு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். இதனையடுத்து மார்ச் 28-ந் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனத்துடன் நடை சாத்தப்படும்.
இந்த நாட்களில் நாள்தோறும் 5,000 பக்தர்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படுவர். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சபரிமலைக்கு செல்ல முடியும். சபரிமலைக்கு செல்வோர் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் செல்ல வேண்டும்.