ஏர் இந்தியா விபத்து "நாசவேலை" காரணமா? மத்திய அமைச்சர் சொன்ன மிக முக்கியமான விஷயம்! பரபரப்பு
டெல்லி: கடந்த மாதம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரித்து வருகிறது. இதற்கிடையே நாசவேலை உட்பட அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளீதர் மொஹோல் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 12ஆம் தேதி, லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் 787-8 ரக விமானம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நொடிகளில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 242 பயணிகளில் ஒருவர் உயிர் பிழைத்தார்.

விமான விபத்து
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, சுமார் 1.30 மணியளவில் 650 அடி உயரத்தில் இருந்த போது விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து அது மேகனின்நகர் பகுதியில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மோதியது. இதனால் கரும்புகை சூழ்ந்தது. இந்த விபத்தில் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் உள்ளிட்ட சிலர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து இப்போது ஏஏஐபி எனப்படும் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் விசாரணை நடத்தி வருகிறது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியும் ஏஏஐபி வசம் உள்ளது. இடையில் அதில் இருக்கும் டேட்டாவை எடுக்க அது வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், அதை மறுத்துள்ள மத்திய அரசு, உள்நாட்டிலேயே விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது.
நாசவேலை?
இந்தச் சூழலில் தான் ஏர் இந்தியா விபத்தில் நாசவேலை உட்பட அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளீதர் மொஹோல் தெரிவித்தார். மேலும், அந்தக் கருப்புப் பெட்டியை வெளிநாட்டிற்கு அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "இது (ஏர் இந்தியா விபத்து) ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். ஏஏஐபி முழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. நாசவேலை உட்பட அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு ஏஜென்சிகள் இதில் ஈடுபட்டுள்ளன" என்றார்.
இதுவரை இப்படி நடந்ததே இல்லை
விபத்து நாளில் விமானம் புறப்பட்ட உடனேயே விமானி 'மேடே' (Mayday) என்ற எமர்ஜென்சி அழைப்பை விடுத்ததாக அகமதாபாத் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இரட்டை எஞ்சின் செயலிழப்பு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது இது குறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், "ஒரே நேரத்தில் இரண்டு எஞ்சின் செயலிழந்தது இதற்கு முன்பு நடந்தது இல்லை. விசாரணை அறிக்கை வந்தவுடன் தான் என்ஜின் பிரச்சினையா, எரிபொருள் சப்ளை பிரச்சினையா என்பது தெரியும்.
3 மாதங்களில் தெரிய வரும்
ஒருவேளை இரண்டு என்ஜின்களும் செயலிழந்திருந்தால் அது ஏன் என்பதும் விசாரணை முடிவில் தான் தெரிய வரும் . காக்பிட்டில் விமானிகள் என்ன பேசினார்கள் என்பது குறித்த உரையாடல் பதிவாகியுள்ளது. அதை ஆய்வு செய்து வருகிறோம். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. அறிக்கை மூன்று மாதங்களில் வரும்" என்றார்.
பொதுவாக விமானம் பறக்கும்போது விமானம் பற்றிய தகவல்கள் அனைத்தும் இந்த பிளாக் பாக்ஸில் தான் சேமிக்கப்படும். விமானம் விபத்தில் சிக்கும் போது, அதை விசாரிக்க உதவுகிறது. பிளாக் பாக்ஸில் CVR மற்றும் விமானத் தரவு பதிவு (FDR) என இரண்டு இருக்கும். விமானிகளின் உரையாடல்கள், விமானத்தின் வேகம், உயரம், திசை போன்ற விமானத்தின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு தகவல்கள் இதில் இருக்கும். இதை ஆய்வு செய்யும்போது இதன் மூலம் விபத்துக்கான காரணத்தைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.












Click it and Unblock the Notifications