100 நாள் வேலைவாய்ப்புத்திட்ட பயனாளிகள் பட்டியலில் சச்சின், அமிதாப், ஐஸ்வர்யாராய்...
டெல்லி: மத்திய அரசின் நூறு நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பயனாளிகள் பட்டியலில், சச்சின் உள்ளிட்ட சில ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களின் பெயரும், அமிதாப் பச்சன், அமீர்கான் போன்ற பாலிவுட் நடிகர்கள் பெயரும் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வறுமையில் வாடுபவர்களுக்கு வேலை அளிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது நூறுநாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம். ஆனால், அதிலும் குளறுபடிகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
பிரபலங்கள் பெயரில் பல இடங்களில் தவறான அடையாள அட்டை இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பிரச்சினையைக் கிளப்பியது. இந்நிலையில், தற்போது கோடிக்கணக்கில் சொத்துக்களை உடைய பிரபலங்கள் பலரின் பெயர் நூறு நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயன்பெற்றவர்கள் பட்டியலில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயனடைந்தவர்கள் பட்டியல்...
கோவா மாநிலத்தின் திஸ்வாடி தாலுகாவுக்கு உட்பட்ட சிம்பெல் கிராமத்தில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில், பயன் பெற்றவர்கள் பட்டியல், மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சச்சின் குடும்பத்தோடு...
அதில், ஓய்வு பெற்ற கிரிக்கெட் பிரபலம் சச்சின் டெண்டுல்கரின் பெயர் மற்றும் அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
மற்ற வீரர்கள்...
இதேபோல், வீரேந்தர் சேவாக், ராகுல் டிராவிட், யுவராஜ் சிங் ஆகியோரின் பெயர்களும் இந்தப் பட்டியலில் உள்ளது.
பச்சான் குடும்பமும்...
கிரிக்கெட் வீரர்கள் தவிர, பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், அவரது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் பெயர்களும் இப்பட்டியலில் உள்ளது.
அமீர்கானும் கூட....
இதேபோல், அமீர் கான் உள்ளிட்ட சில பிரபலங்களும் பயனாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
முதல்வர் பெயரும்...
இதில் பெரும் அதிர்ச்சி என்னவென்றால் கோவா முதலமைச்சர் மனோஹர் பரிக்கரின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது தான்.
குடியரசுத் தலைவருக்குக் கடிதம்...
இதுகுறித்து உடனடி விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி கோவா பரிவர்த்தன் மன்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.