"கடவுள்" தேசமாக மாறப் போகும் கேரளா!
கொச்சி: கிரிக்கெட் ரசிகர்களால் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், கேரள மாநிலம் கொச்சியில் வீடு ஒன்றை வாங்கப் போகிறாராம்.
கொச்சியில் உள்ள பிரபலமான பிரைம் மெரிடியினில் பிரமண்டமான சொகுசு வில்லாவை அவர் வாங்கவுள்ளார். இதற்காக அவர் நாளை கொச்சி வருகிறார். இந்த வீட்டைப் பார்வையிடுகிறார்.
இந்த வீடு, தென்னிந்தியாவில் சச்சின் வாங்கும் முதல் வீடாகவும் அமையும்.
கடவுளின் தேசம்...
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கேரளா, சச்சினின் 2வது வீடாக மாறி விட்டது. கேரளா பிளாஸ்டர்ஸ் எனப்படும் இந்தியக் கால்பந்து லீக் அணியின் உரிமையாளராக சச்சின் இருக்கிறார்.
கொச்சியில் வீடு...
மேலும், கேரளாவில் அதிக நாட்கள் தங்கவும் அவர் விரும்புவதாக தெரிகிறது. எனவே தான் கொச்சியில் வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கடலுக்கு அருகில் வில்லா...
குன்டன்னூர் என்ற இடத்தில் இந்த பிரைம் மெரிடியன் உள்ளது. கடலுக்கு அருகே உள்ள அழகான பகுதி இது. தற்போது இங்கு சச்சின் வாங்கப் போகும் வில்லா கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
வெள்ளி விழா நிகழ்ச்சி...
இன்று கோவை வரும் சச்சின் நாளை இரவு கொச்சி வருகிறார். அங்கு சர்வதேச விளம்பர நிறுவன சங்கத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் அவர் வில்லாவைப் பார்வையிடச் செல்கிறார்.
ஓணம் வாழ்த்து...
கொச்சியில் வீடு வாங்கும் சச்சின் சமீபத்தில் ஓணம் பண்டிகையையொட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் மலையாளிகளுக்கு வாழ்த்துக் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.