இந்தியன் சூப்பர் லீக் இளைய தலைமுறை வீரர்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது...சச்சின் தெண்டுல்கர் பேச்சு
திருவனந்தபுரம் : இளைய தலைமுறை வீரர்களுக்கு, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டிகள் அடித்தளமாக அமைந்துள்ளது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்தார்.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்தாட்டங்களின் 2- வது சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. கேரள பிளாஸ்டர் கால்பந்தாட்ட அணியின் உரிமையாளராக சச்சின் தெண்டுல்கர் உள்ளார். இதற்கு முத்தூட் நிறுவனம் ஸ்பான்சர் செய்து வருகிறது.

கேரள பிளாஸ்டர் கால்பந்தாட்ட அணி வீரர்களின் அறிமுகம் மற்றும் சீருடை (ஜெர்சி) அறிமுக விழா நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமை தாங்கினார். விழாவில், அணி வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து வீரர்களின் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உம்மன் சாண்டி மஞ்சள் நிற ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் சச்சின் தெண்டுகர் பேசியதாவது..
கேரள பிளாஸ்டர் அணி கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு கடைசி நேரத்தில் 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இந்தியன் சூப்பர் லீக் 2- வது சீசனில் கேரள பிளாஸ்டர் அணி ரசிகர்களின் மேலான ஆதரவுடன் சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்தியன் சூப்பர் லீக், இளைய தலைமுறை கால்பந்தாட்ட வீரர்களின் திறமையினை வளர்க்கும் அடித்தளமாக அமைந்துள்ளது. சர்வதேச வீரர்களுடன் விளையாடும் நமது இளம் வீரர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு சச்சின் கூறினார்.












Click it and Unblock the Notifications