மகாராஷ்டிரா மாநில பாடத்திட்டத்தில் இடம் பிடித்த சச்சின்!
மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசின் பள்ளி பாடத்திட்டத்தில் பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரைப் பற்றிய ஒரு அத்தியாயத்தை அம்மாநில அரசு சேர்த்துள்ளது.
கிரிக்கெட் கடவுளாகப் போற்றப் படுகிறவர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் கடந்தாண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து சச்சினை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது. சச்சினுக்கு அவரது தீவிர ரசிகர் ஒருவர் உண்மையிலேயே கோவில் கூட கட்டினார்.
இந்நிலையில், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சச்சின் பற்றிய தகவல்களை தங்களது பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது மகாராஷ்டிர அரசு.
கிரிக்கெட்டின் வாழும் கடவுள்...
நான்காம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்த ஆண்டு முதல், "கிரிக்கெட்டின் வாழும் கடவுள்" என்ற அத்தியாயம் சேர்க்கப் பட உள்ளது.
விளக்கம்...
இதன் மூலம் சிறப்பு மிக்க கிரிக்கெட் வீரரான டெண்டுல்கரை பற்றி படிக்கும் போது மாணவர்களுக்கு விளையாட்டில் நல்ல ஈர்ப்பு ஏற்படும் என அரசு விளக்கமளித்துள்ளது.
மராத்தி மற்றும் ஆங்கிலம்...
மேலும், மராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் அவர் பற்றிய அத்தியாயம் அச்சடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பள்ளி கல்வி துறை அமைச்சரான ராஜேந்திர டார்டா தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டம்...
விரைவில், இந்த அத்தியாயத்தை அனைத்து வகுப்பு பாடத்திட்டத்திலும் சேர்க்க அம்மாநில அரசு யோசித்து வருவதாகத் தெரிகிறது.
கவாஸ்கர்...
ஏற்கனவே அம்மாநில பாடத்திட்டத்தில் கவாஸ்கர் மற்றும் சந்து போர்டே போன்ற விளையாட்டு வீரர்களின் தகவல்கள் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.