சோனியாவை தரக்குறைவாக பேசிய கிரிராஜ் சிங்... லோக்சபாவில் காங்கிரஸ் கடும் அமளி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நிறம் பற்றி பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் லோக்சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டனர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை துவங்கியது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் வரும் மே மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. அந்த மசோதாவை நிறைவேற்றவிடக் கூடாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் உள்ளன.

இந்நிலையில் இன்று காலை லோக்சபா கூடியதும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தோலின் நிறத்தை பற்றி தரக்குறைவாக பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை உடனே பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
அவை கூடிய பிறகு கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸார் வலியுறுத்தினர். இதையடுத்து தனது இருக்கையில் இருந்து எழுந்த கிரிராஜ் கூறுகையில், நான் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்றார்.
முன்னதாக கிரிராஜ் சிங் கூறுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கருப்பின பெண்ணை திருமணம் செய்திருந்தால் அவரை காங்கிரஸார் கட்சித் தலைவியாக ஏற்றுக் கொண்டிருப்பார்களா என்று கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications