சஹரன்பூர் கலவரம்: தூண்டியது பாஜக எம்.பி; அதிகாரிகளின் மெத்தனமும் காரணம் - விசாரணை அறிக்கை
சஹரன்பூர்: உ.பி. மாநிலம் சஹரன்பூரில் நடந்த மதக் கலவரத்திற்கு பாஜகதான் காரணம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐந்து பேர் கொண்ட இந்த விசாரணைக் கமிஷன் தனது விசாரணை அறிக்கையை உ.பி. முதல்வர் அகிலேஷ் சிங் யாதவிடம் சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து உ.பியில் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.
இந்த அறிக்கையில் பாஜக எம்.பி. ராகவ் லக்கன்பால்தான் கலவரத்தைத் தூண்டியதாக கூறப்பட்டுள்ளதால் சர்ச்சை மேலும் அதிகரித்துள்ளது.

சீக்கியர்கள் - இஸ்லாமியர்கள் மோதல்
கடந்த மாதம் உ.பி. மாநிலம் சஹரன்பூரில் இஸ்லாமியர்களுக்கும், சீக்கியர்களுக்கும் இடையே திடீர் கலவரம் வெடித்தது.

3 பேர் பலி
இந்தக் கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இரு தரப்பினரும் அப்போது கடுமையாக மோதிக் கொண்டனர்.

நிலப் பிரச்சினை
சீக்கியர்களின் குருத்வாராவுக்கு அருகே ஒரு காலி இடம் உள்ளது. அதில் குருத்வாராவின் விரிவுக்கான கட்டுமானப் பணியை சீக்கியர்கள் மேற்கொண்டபோது அதைத் தடுத்தனர் இஸ்லாமியர்கள். அங்கு ஏற்கனவே ஒரு மசூதி இருந்ததால் அங்கு சீக்கியர்கள் கட்டுமானம் மேற்கொள்ளக் கூடாது என்று கோரினர். இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே திடீர் மோதல் வெடித்து பெரும் கலவரமாக மாறிப் போனத.

விசாரணைக் கமிஷன்
இந்த கலவரம் தொடர்பாக 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை உ.பி. அரசு நியமித்தது. அக்குழு தற்போது தனது அறிக்கையை முதல்வர் அகிலேஷிடம் சமர்ப்பித்துள்ளது.

லக்கன்பால்தான் காரணம்
இந்த அறிக்கையில் பாஜக எம்.பி ராகவ் லக்கன்பால்தான் கலவரத்தைத் தூண்டியதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், கலவரத்தைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பாஜக கண்டனம்
இந்த அறிக்கை குறித்து உ.பி.யைச் சேர்ந்தவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் கூறுகையில், சமாஜ்வாடிக் கட்சியின் அறிக்கை இது. அது அப்படித்தான் இருக்கும். நான் அந்த அறிக்கையை முழுமையாக பார்க்கவில்லை என்றார்.

சரியான அறிக்கைதான்- சமாஜ்வாடி
மூத்த சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில், அறிக்கை தெளிவாக உள்ளது. அதிகாரிகளின் அலட்சியப் போக்குதான் முக்கியக் காரணம். எனவே தவறு செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரை நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இருவருமே காரணம் - மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில், இந்தக் கலவரத்திற்கு சமாஜ்வாடி அரசும், பாஜக இருவருமேதான் பொறுப்பு. விசாரணைக் கமிட்டி அறிக்கை பாரபட்சமாக உள்ளது. இதை ஏற்க முடியாது. பொதுச் சொத்தும், மத நல்லிணக்கவும் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அழிந்து போய் விட்டது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இது மேலும் மோசமடைந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications