ஆப்பிரிக்க சிறையில் கணவன், பிண அறையில் மகன்: இந்திய கப்பல் கேப்டனின் மனைவி கண்ணீர்
மும்பை: ஆப்பிரிக்க சிறையில் வாடும் கணவனை மீட்டுத் தருமாறு மத்திய அரசிடம் மன்றாடும் இந்திய கப்பல் கேப்டனின் மனைவி தற்போது தன்னுடைய 11 மாத ஆண் குழந்தை இறந்த சோகத்தில் மூழ்கியுள்ளார்.
இந்திய கப்பலான எம்.வி. ஓஷன் சென்ச்சுரியனின் கேப்டனாக இருப்பவர் மும்பையைச் சேர்ந்த சுனில் ஜேம்ஸ் (38). அவரது மனைவி அதிதி. சுனில் கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி நைஜீரியா அருகே உள்ள லாகோஸில் கப்பலில் சென்று கொண்டிருக்கையில் அதை கடற்கொள்ளையர்கள் தாக்கினர். இதையடுத்து ஜூலை 30ம் தேதி இந்த சம்பவம் குறித்த விசாரணைக்காக மேற்கு ஆப்பிரிக்காவின் டோகோ நாட்டின் தலைநகர் லோமில் கப்பலை நிறுத்திவிட்டு வந்த சுனில் அந்நாட்டு கடலோரக் காவல்படையால் கைது செய்யப்பட்டார். கடற்கொள்ளையர்களுக்கு உதவியதாக சுனில் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவரை மீட்டுத் தருமாறு அவரது மனைவி அதிதி மத்திய அரசிடம் முறையிட்டு வருகிறார். இந்நிலையில் அவர்களின் 11 மாத ஆண் குழந்தை உடல் நலக்குறைவால் கடந்த 2ம் தேதி உயிர் இழந்தது. குழந்தையின் உடல் மருத்துவமனையில் உள்ள பிண அறையில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் இறுதிச் சடங்குகளை செய்ய தனது கணவர் வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளார் அதிதி.












Click it and Unblock the Notifications