முழு பலத்துடன் மீண்டு வருவேன்... சாய்னா நேவால் நம்பிக்கை!
ஹைதராபாத்: தோல்விகளிலிருந்து முழு பலத்துடன் மீண்டு வருவேன் என்று இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையரில் தொடக்க சுற்றுடன் அதிர்ச்சிகரமாக வெளியேறினார் இந்திய வீராங்கனை சாய்னா நேவால். அவர் வலது முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சாய்னாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஓய்வில் இருந்து வரும் சாய்னா, இந்த மாத இறுதியில் துபாயில் நடைபெறவிருக்கும் உலக பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சாய்னா நேவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ''இந்த தோல்விகளிலிருந்து மீண்டு முழு பலத்துடன் திரும்பி வரவேண்டும் என்பதே எனது ஆசை. கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக விளையாடியது போன்று அடுத்த இரண்டு, மூன்று வருடங்களும் விளையாட முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். நான் முழுபலத்துடன் விளையாட வேண்டும் என்பது கடவுளின் விருப்பமாகவும் இருக்கலாம்'' என்றார்.
சாய்னாவின் காயம் குணமடைந்து டிசம்பர் மாதம் முழு உடற்தகுதியுடன் விளையாட வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் தோல்விகள் காரணமாக அவர் உலக தரவரிசையில் 5-வது இடத்திலிருந்து 9-இடத்திற்கு சரிந்துள்ளார்.
உடல்நிலை காரணமாக அடுத்து வரவிருக்கும் ஜப்பான், டென்மார்க், பிரான்ஸ் சூப்பர் சீரிஸ் போட்டிகளில் சாய்னா கலந்து கொள்ள மாட்டார். இதனால் அவரது தரவரிசை மேலும் பின்னடைவை சந்திக்க நேரிடும்.












Click it and Unblock the Notifications