வேகமாக பரவும் மிக மோசமான நோய்! காரணம் பானி பூரியாம்.. அதிரடியாக தடை விதித்த நேபாளம்
காத்மாண்டு: நேபாள நாட்டில் காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் பானி பூரி விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல, நேபாளத்திலும் மிகவும் பிரபலமான ஸ்டிரீட் புட்களில் ஒன்று பானி பூரி. தெரு ஓரங்களில் விற்பனை செய்யப்படும் பானி பூரிகளைச் சாப்பிடவே கூட்டம் அள்ளும்.
அதேநேரம் இதுபோன்ற கடைகளில் எந்தளவுக்கு சுகாதாரம் முறையாகப் பின்பற்றப்படுகிறது என்பதே கேள்விக்குறி தான். குறிப்பாக பானி பூரிகளில் பயன்படுத்தப்படும் நீர் தான் சர்ச்சையில் சிக்கும்.
நேபாளம்
இதனிடையே காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த சில நாட்களாகவே காலரா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஓரிரு நாட்களில் மட்டும் அங்கு சுமார் 12 பேருக்குக் காலரா உறுதி செய்யப்பட்டுள்ளது. காத்மாண்டு மாநகரில் ஐந்து பேருக்கும் சந்திரகிரி மற்றும் புத்தனில்கந்தா நகராட்சியில் தலா ஒருவருக்கும் காலரா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தடை
இது தொடர்பாக காத்மாண்டு மாநகராட்சி தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது. அதில் பல இடங்களில் பானி பூரி கடைகளில் பயன்படுத்தப்படும் நீரில் காலரா பாக்டீரியா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைச் சாப்பிடும் மக்களுக்கு மிக எளிதாக காலரா பரவும் அபாயம் உள்ளது. இதையடுத்து காத்மாண்டு பகுதியில் பானி பூரி விநியோகம் மற்றும் விற்பனைக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உணவு பிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காலரா
காலரா என்பது ஒரு பாக்டீரியா நோயாகும். இது பொதுவாக அசுத்தமான நீரில் எளிதாகப் பரவும். காலரா பாதிப்பு ஏற்பட்டால் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு ஏற்படும். உரிய நேரத்தில் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால், ஆரோக்கியமான நபர்களுக்குக் கூட உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதன் காரணமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பானி பூரி விற்பனைக்கு அங்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
மேலும், யாருக்காவது காலரா அறிகுறிகள் இருந்தால் அவர்கள், உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்குச் செல்லுமாறு நேபாள நாட்டின் சுகாதார மற்றும் மக்கள்தொகை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. வரும் மழைக் காலங்களில் காலரா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அந்நாட்டு அரசு இப்போதே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது.
Recommended Video
அசுத்தமான நீர்
காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் குறிப்பாக வழக்கமாகக் கோடை மற்றும் மழைக் காலங்களில் வேகமாகப் பரவும் வாய்ப்புக்கள் உள்ளன. அசுத்தமான நீரே இதுபோன்ற நோய்கள் பரவ முக்கிய காரணம். இதன் காரணமாகவே அதைத் தடுக்க முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.