திருப்பதி: ஏழுமலையானை விரைவில் தரிசிக்க தபால் நிலையங்களில் டிக்கெட் விற்பனை
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் இனி தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாதாரண பக்தர்கள் சுலபமாக சாமி தரிசனம் செய்வதற்கு 300 ரூபாய் டிக்கெட் வழங்கப்பட்டது. திருமலைக்கு நேரடியாக வரும் பக்தர்களுக்கு 300 ரூபாய் டிக்கெட் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் 11 ஆயிரம் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.
அத்துடன் இன்னும் கூடுதலாக பயோ மெட்ரிக் மூலம் தபால் நிலையங்களில் 4 ஆயிரம் தரிசன டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டது.
பயோமெட்ரிக் மூலம் தபால் நிலையங்களில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கும் பணி இன்னும் ஒருசில நாட்களில் தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
முதல் கட்டமாக திருப்பதி, சித்தூர், விஜயநகரம், வாரங்கல், ஏழுர் உள்பட 91 தபால் நிலையங்களில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் வெற்றி பெற்றால் இன்னும் கூடுதலாக 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்படும். பல ஊர்களில் திட்டம் விரிவுபடுத்தப்படும். அத்துடன் தகவல் மையங்களிலும் வழங்கப்படும்.
ஒரு டிக்கெட்டுக்கு 3 ரூபாய் 16 பைசா செலவாகிறது. அந்த தொகையை சம்பந்தப்பட்ட தபால் நிலையத்துக்கு திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.