மும்பை ஹைகோர்ட்டுக்கு வெளியே சல்மான் கானின் ரசிகர் தற்கொலை முயற்சி
மும்பை: நடிகர் சல்மான் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தபோது மும்பை உயர் நீதிமன்றத்திற்கு வெளியே ரசிகர் ஒருவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
2002ம் ஆண்டு குடிபோதையில் காரை ஓட்டி ஒருவரை கொலை செய்த வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சல்மான் கான் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி இடைக்கால ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில் சல்மான் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அபய் திப்சே சல்மானுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். சல்மான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். சல்மான் சார்பில் வழக்கறிஞர் அமீத் தேசாய் ஆஜரானார்.
விசாரணை நடந்தபோது சல்மான் கானின் ரசிகர்கள் அவரின் வீடு மற்றும் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு வெளியேயும் கூடினர். இந்நிலையில் சல்மானின் தீவிர ரசிகர் ஒருவர் நீதிமன்றத்திற்கு வெளியே விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். போலீசார் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சல்மான் கானுக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்றும், அவர் சிறைக்கு செல்லக் கூடாது என்றும் அவர் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணை நடந்தபோது சல்மான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மாறாக தனது அபார்ட்மென்ட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.