மத்தியில் மூன்றாவது அணி அரசு அமைக்க முலாயம்சிங் மும்முரம்
டெல்லி: மத்தியில் மூன்றாவது அணி அரசு அமைக்க முலாயம்சிங் டெல்லியில் முகாமிட்டு ஆதரவு திரட்டி வருவதாக சமாஜ்வாடி கட்சி தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான அனைத்து கருத்து கணிப்புகள் ஒருபக்கம் இருக்க இவற்றை நம்ப முடியாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.
மத்தியில் அரசு அமைக்க மதச்சார்பற்ற கட்சிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி மூன்றாவது அணி அரசு அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான நரேஷ் அகர்வால் கூறுகையில், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், 14-ந் தேதியில் இருந்து டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் எங்கள் கட்சியின் இதர தலைவர்களுடன் இணைந்து, மற்ற மதச்சார்பற்ற கட்சிகளை தொடர்பு கொண்டு வருகிறார்.
மத்தியில், மூன்றாவது அணி அரசை அமைப்பதற்காக அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய சூழ்நிலையில், சமாஜ்வாடி கட்சி முக்கிய பங்கு வகிக்கும். பாரதிய ஜனதாவின் மாயத்தோற்றம் நொறுங்கி விடும். மூன்றாவது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம் என்றார்