சமாஜ்வாதி கட்சி வெள்ளி விழா கோலாகலம்.. பல கட்சி தலைவர்கள் பங்கேற்பு.. கூட்டணிக்கு அச்சாரம்?
லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் வெள்ளிவிழா இன்று உத்தரபிரதேச தலைநகர், லக்னோவில் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இதில் லாலு பிரசாத் யாதவ், தேவகவுடா, சரத் யாதவ் போன்ற ஜனதா பரிவார கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். ஆனால், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் புறக்கணித்துவிட்டார்.
உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை மனதில் வைத்து புதிய மெகா கூட்டணி அமைக்க ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் திட்டமிட்டுள்ளார்.

இந்த கூட்டணிக்கு கட்சிகளை சேர்க்க சமாஜ்வாதி கட்சியின் வெள்ளி விழாவை பயன்படுத்தவும் அவர் திட்டமிட்டார். எனவே விழாவிற்கு பல்வேறு முக்கிய கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பினார்.
உத்தரபிரதேசத்தில் பாஜக செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறிவரும் நிலையில், அக்கட்சிக்கு எதிராக மிகப் பெரிய கூட்டணியை அமைத்து சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு, மீண்டும் ஆட்சியை பிடிக்க முலாயம்சிங் வியூகம் வகுத்து வருகிறார்.
அவரது அழைப்பை ஏற்று, முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவகவுடா, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவர் அஜித் சிங், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், இந்திய தேசிய லோக்தளம் தலைவர் அபய் சவுதால்யா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தேவகவுடாவிடம் இதுகுறித்து கேட்டபோது, கூட்டணி பற்றி பேச நான் வரவில்லை. சமாஜ்வாதி கட்சி வெள்ளி விழாவில் பங்கேற்கவே வந்துள்ளேன் என கூறினார்.
இதனிடையே உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்து மக்களிடம் நன்றி தெரிவித்தார். கட்சிக்குள் எதிரும், புதிருமாக இருக்கும் சித்தப்பா சிவ்பால் யாதவ் காலை தொட்டு கும்பிட்டு ஆசியும் பெற்றார் அகிலேஷ் யாதவ்.












Click it and Unblock the Notifications