தெலுங்கானா தூதராக 'பாகிஸ்தான் மருமகள்' சானியாவை நியமிக்க கூடாது: பாஜக எதிர்ப்பு
ஹைதராபாத்: பாகிஸ்தான் நாட்டு மருமகளான சானியா மிர்சாவை இந்தியாவின் தெலுங்கானா மாநில தூதராக நியமிக்கப்பட்டது தவறு என்று அம்மாநில பாஜக தலைவர் கே.லட்சுமணன் விமர்சனம் செய்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக விசித்திரமாக நடந்துகொள்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மாநில தூதர்
27 வயதான இந்திய முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, உலக டென்னிஸ் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளார். இவரது புகழை பயன்படுத்திக்கொள்ள விரும்பிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், சானியாவை தங்கள் மாநிலத்தின் தூதராக நியமித்து, ரூ.1 கோடி காசோலையையும் இரு தினங்கள் முன்பு வழங்கியிருந்தார்.

தெலுங்கானாவின் மகள்
சானியாவை தெலுங்கானாவின் மகள் என்று வர்ணித்த சந்திரசேகரராவ், டென்னிசில் மேலும் முன்னேற்றம் காண சானியாவை வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மருமகள்
இந்நிலையில், தெலுங்கானா தூதராக சானியாவை நியமித்ததை அம்மாநில பாஜக தலைவர் லட்சுமணன் விமர்சனம் செய்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து ஹைதராபாத்தில் குடியேறியவர் சானியா மிர்சா. இதன்பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டு பாகிஸ்தானின் மருமகளாகவும் ஆகிவிட்டார்.

தெலுங்கானாவுக்கு ஆதரவு தரவில்லையே
தெலுங்கானா மாநில பிரிப்புக்காக பல மக்கள் உயிரைவிட்டனர். பெரும் போராட்டம் நடந்தது. ஆனால் சானியா மிர்சா இம்மாநிலத்துக்கு ஆதரவாக ஒரு நாளும் வாய்திறந்தது கிடையாது. பாகிஸ்தான் மருமகளான சானியாவிடம் தெலுங்கானா விசுவாசம் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

ஹைதராபாத் தேர்தல் காரணம்
கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சிக்கு விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் அங்கு பெருவாரியாக வசிக்கும் இஸ்லாமியர்கள் வாக்குகளை பெறுவதற்காக, தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கட்சி சானியாவை தூதராக நியமித்துள்ளது. இவ்வாறு லட்சுமணன் தெரிவித்தார்.

காங்கிரஸ் விமர்சனம்
இதனிடையே காங்கிரஸ் கட்சி இந்த வாதத்தை ஏற்க மறுத்துள்ளதுடன், பாஜக விசித்திரமாக நடந்துகொள்வதாக விமர்சனம் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications