நடிகர் சஞ்சய்தத்துக்கு சிறையில் பீர், ரம்: பாஜக புகார்
மும்பை: சிறையில் உள்ள நடிகர் சஞ்சய்தத்திற்கு பீர், ரம் போன்றவை கொடுக்கப்படுவதாக பாஜகவைச் சேர்ந்த மராட்டிய மாநில எதிர்கட்சித்தலைவர் வினோர் தவேதி பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக நடிகர் சஞ்சய்தத்துக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் புனேயில் உள்ள ஏரவாடா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பா.ஜ.க. முன்னணி தலைவரும், மராட்டிய மாநில எதிர்க்கட்சி தலைவருமான வினோத் தவேதி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். மராட்டிய மாநில சட்டசபை கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:
மராட்டிய மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மட்டும் மராட்டியத்தில் 216 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
ஏரவாடா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய்தத் கேட்டதையெல்லாம் கொடுக்கிறார்கள். அவருக்கு இரவு நேரங்களில் பீர், ரம் போன்ற மதுபானங்கள் கூட கொடுக்கப்படுகிறது. போலீஸ் அதிகாரிகளே இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்.
இதுபற்றி உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், மகளிர் மேம்பாட்டு மந்திரி வர்ஷா கெய்க்வாட் ஆய்வு நடத்தினால் உண்மை தெரியும். ஏராளமான கிரிமினல் வழக்குகளில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வில்லை.
அரசின் பல்வேறு திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது. குற்றவாளிகளிடம் அரசு மென்மையாக நடந்து கொள்வதால் 93 சதவீத குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகிறார்கள். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் வினோத் தவேதி கூறினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு திங்கட்கிழமை பதில் அளிப்பதாக மராட்டிய மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications