பெரும் போராட்டத்திற்குப் பின் மீண்டும் பரோலில் வெளிவந்தார் சஞ்சய் தத்...
புனே: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு புனே சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத் மனைவியின் உடல்நிலையைக் காரணம் காட்டி மீண்டும் 30 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி எரவாடா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நடிகர் சஞ்சய் தத், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு உடல்நிலைச் சரியில்லை எனக்கூறி பரோலில் வெளிவந்தார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறைக்குச் சென்ற அவர் தற்போது அவரது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறி, மீண்டும் பரோலில் வெளிவந்துள்ளார்.

சிறைதண்டனை....
1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் 5 ஆண்டுகளாகக் குறைத்தது. சஞ்சய் தத் ஏற்கெனவே 18 மாதங்கள் தண்டனையை அனுபவித்து விட்டார்.

மத்திய அரசின் கோரிக்கை....
இந்நிலையில், 5 ஆண்டு சிறைத் தண்டனையைக் குறைப்பதற்கான வழிகளை ஆராயுமாறு மகாராஷ்டிர மாநில அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

முதல் பரோல்....
இந்நிலையில் சஞ்சய் தனது காலில் வலி எனக் கூறி கடந்த அக்டோபர் 1ம் தேதி பரவலில் வெளிவந்தார். உடல் நலக் குறைவுக்கு சிகிச்சை பெறுவதற்காக பரோலில் வந்திருந்தார். அம்மாதம் 14- ஆம் தேதியுடன் பரோல் முடியவிருந்த நிலையில், நீதிமன்றத்தை அணுகி மேலும் 15 நாட்களுக்கு பரோலை நீட்டித்தார் சஞ்சய்.

தீபாவளி வாழ்த்து...
பின்னர் பரோல் காலம் முடிவடைந்து தீபாவளிக்கு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தபடி மீண்டும் சிறைக்குத் திரும்பினார் சஞ்சய்.

மீண்டும் பரோல்....
இந்நிலையில், சஞ்சய் தத் தனது மனைவி மான்யதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி ஒரு மாதம் பரோல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இதற்கு கடந்த 6ம் தேதி அனுமதி அளிக்கப்பட்டது.

சர்ச்சை....
ஆனால், அன்றைய தினம் மன்யதா 2 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது பற்றி செய்தி வெளியானதால், சஞ்சய் தத்துக்கு பரோல் வழங்க சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உண்மை தான்....
எனினும் மான்யதாவை பரிசோதித்த டாக்டர் ஒருவர் அவருடைய கல்லீரலில் கட்டி உருவாகி இருப்பதாகவும், இருதய நோய் இருப்பதாகவும் சான்று அளித்தார்.

காலதாமதம்...
அதனைத் தொடர்ந்து சஞ்சய் தத்துக்கு பரோல் வழங்கப்பட்டது. எனினும், உத்தரவாதம் வழங்கும் நடைமுறைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தொடர்ந்து சிறையில் இருந்து வந்தார்.

வீடு திரும்பினார்....
இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு அவர் சிறையில் இருந்து பரோலில் விடுதலை செய்யப்பட்டார். அங்கிருந்து புறப்பட்ட அவர், நேற்று பிற்பகல் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.












Click it and Unblock the Notifications