சஞ்சய்தத்துக்கு ‘பரோல்’ நீட்டிப்பு ஏன்? மகா. அரசுக்கு மத்திய அரசு விளக்க நோட்டீஸ்!
டெல்லி: நடிகர் சஞ்சய்தத்துக்கு தொடர்ச்சியாக பரோல் நீட்டிப்பு செய்தது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்கும்படி மகாராஷ்டிரா அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ்அனுப்பி உள்ளது.
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் தண்டனை பெற்று புனே எரவாடா சிறையில் நடிகர் சஞ்சய் தத் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சஞ்சய்தத் தமது மருத்துவ சிகிச்சைக்காக கடந்த ஆண்டு அக்டோபரில் 15 நாட்கள் பரோலில் வெளிவந்தார். அந்த பரோல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மனைவி மான்யதா உடல்நலக்குறைவை தொடர்ந்து சஞ்சய் தத் டிசம்பர் 21-ந்தேதி ஒரு மாதம் பரோலில் வெளியில் வந்தார். அப்போது அவரது பரோலுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தன. ஆனாலும் எதிர்ப்பை மீறி பரோல் வழங்கப்பட்டது.
அவர் பரோல் முடிந்து கடந்த ஜனவரி 21-ந்தேதி சிறை சென்றிருக்க வேண்டும். ஆனால் உடல்நலமுற்ற மனைவியை உடன் இருந்து கவனித்துக்கொள்வதற்காக மீண்டும் ஒரு மாதம் பரோலும், அதனை அடுத்து 2-வது முறையாக மற்றொரு மாதம் பரோலும் நீட்டிக்கப்பட்டது.
இந் நிலையில் சஞ்சய் தத்துக்கு மீண்டும் மீண்டும் பரோல் நீட்டிப்பு செய்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உள்ளது. அவருக்கு தனிச்சலுகை காட்டுவது ஏன்? என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மகாராஷ்டிரா அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications