சாரதா சிட்பண்ட் வழக்கில் வேகம் காட்டும் சிபிஐ! மம்தா பானர்ஜி மீது பிடி இறுகுகிறது
டெல்லி: சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் ஒரே நாளில் சிபிஐ 46 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த ஊழலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் தொடர்புள்ளதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில், சிபிஐ வழக்கில் காட்டும் வேகம் திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம், ஓடிசா மாநிலங்களில் செயல்பட்டு வந்த சாரதா சிட்பண்ட் உரிமையாளர், ஊழியர்கள் ஆகியோர், பொதுமக்களின் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்த வழக்கு கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தால் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சாரதா சிட்பண்ட் உரிமையாளர் சுதிப்தா சென், திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.குணால் கோஷ் உள்ளிட்டோர் பெயர்கள், சிபிஐயால் குற்றவாளிகள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குணால் கோஷ், சாரதா சிட்பண்ட் ஊடக தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்ததால் அவரது பெயரும் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் கடந்தாண்டு நவம்பரில் குணால் கோஷ் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் காஷ்மீர் மாநிலத்தில் வைத்து சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் வழக்கில் தலையீடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் மே.வங்கத்தில் 3 மற்றும் ஒடிசாவில் 43 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, மம்தா பானர்ஜிக்கு சாரதா சிட்பண்ட் ஊழலில் தொடர்புள்ளது என்று நரேந்திரமோடி குற்றம்சாட்டி பேசினார். இதற்கு மம்தா பானர்ஜி பதிலடியாக, நான் மட்டும் டெல்லியில் ஆட்சியில் இருந்திருந்தால் மோடியை கயிற்றால் கட்டி சிறையில் தள்ளியிருப்பேன் என்று ஆவேசப்பட்டார். சாரதா சிட்பண்ட்ஸ் வழக்கு துரிதமாக நடைபெறுவதை பார்த்தால் மம்தா தலைக்கு மேல் கத்தி தொங்குவதைப்போல தெரிகிறது.












Click it and Unblock the Notifications