காலை முதல் மாலை வரை ஜெ.வுடன் ஒரே அறையில் இருந்த சசி, இளவரசி!
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் இன்று காலை முதல் சசிகலாவும், இளவரசியும் உடன் இருந்ததாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையின் டிஐஜி ஜெய்சிம்ஹா தெரிவித்துள்ளார்.
மாலைக்கு மேல் இருவரும் அவரவர் அறைக்குப் போய் விடுவார்கள் என்றும் டிஐஜி கூறியுள்ளார். இன்று மட்டும் ஜெயலலிதாவுடன் இவர்கள் இருவரும் தங்கியதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் ஜெய்சிம்ஹா பேசுகையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மேடம் மிக மிக நலமாக உள்ளார். அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
அவருக்கு சர்க்கரை அளவு, ரத்தக் கொதிப்பு ஆகியவை நார்மலாக உள்ளன. அவரை சசிகலா, இளவரசி ஆகியோர் நன்றாகப் பார்த்துக் கொள்கின்றனர்.
இன்று காலை முதல் அவர்கள் இருவரும் ஜெயலலிதாவுடன் தான் உள்ளனர். மாலை வரை உடன் இருப்பார்கள். எனவே தமிழக மக்கள் பயப்பட வேண்டாம். மேடம் நன்றாகவே உள்ளார். அவரது உடல் நலம் குறித்து வெளியாகும் எந்த வதந்தியைும் நம்ப வேண்டாம். மேடம் நன்றாக உள்ளார் என்பதை தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெய்சிம்ஹா கூறியுள்ளார்.