அதிமுக பொதுச்செயலர், முதல்வர் பதவிக்கு சசிகலா தகுதியானவர் இல்லை: ஓ.பி.எஸ் சூசகம்
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு நிருபர்களிடம் பேசுகையில், அம்மா ஆட்சியை பாராட்டி மக்கள் வலுவான ஒரு கட்சியையும், ஆட்சியையும் தந்துள்ளனர். நமக்குள் எந்த வேறுபாடும் இல்லாமல், பொறுப்பாக நடந்து கொள்ளும் சூழலைத்தான், கட்சியினர் செய்ய வேண்டுமே தவிர, என்னை உட்கார வைத்துக்கொண்டு எனது பதவிக்கும், எனக்கும் அவமானம் செய்திருக்க கூடாது. தனிப்பட்ட முறையில் என்னை அவமானப்படுத்தியிருந்தால் கூட பொறுத்துக்கொண்டிருப்பேன்.
ஆனால் எனது மனநிலை மிகவும் பாதிப்பை சந்தித்தது. பலரிடம் கூறி வருத்தப்பட்டேன். எல்லோரும் பொறுமையாக இருங்கள் என கூறினர். கடுகளவு கூட கட்சிக்கு பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதையெல்லாம் வெளியே சொல்லவில்லை.

இந்த சூழலில்தான் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து எம்.எல்.ஏக்களிடமும் கையெழுத்து பெற்றுக் கொண்டனர். சின்னம்மா முதல்வராக வருவதற்கு அனைவரும் சேர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் தமிழகத்தில் அதுமாதிரி சூழல் இல்லை என்பது எனது மனதில் தோன்றியது.
இப்போது எதற்கு அவசியம் என்று நான் கேள்வி எழுப்பினேன். முதல்வர்-கழக பொதுச்செயலர் ஆகிய இரு பதவியும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதால் நீங்கள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என கூறிவிட்டனர்.
கழகத்தை கட்டுக்கோப்பாக வழிநடத்தும் ஒருவரையும், ஆட்சியை புரட்சி தலைவர் அம்மா போல ஆட்சி நடத்தும் ஒருவரும்தான், அந்த பதவிக்கு வர வேண்டும். பன்னீர்செல்வம் என்று இல்லை தகுதியுடைய யார் வேண்டுமானாலும் வரலாம். இவ்வாறு ஓ.பி.எஸ் தெரிவித்தார். எனவே சசிகலா இப்பதவிகளுக்கு தகுதியற்றவர் என்பதை ஓ.பி.எஸ் பூடகமாக கூறியுள்ளார் என்றே புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications