எனக்கு என்ன நடந்தாலும் அதற்கு ஜெ.,தான் பொறுப்பு - சசிகலா புஷ்பா ஆவேச பேட்டி !
டெல்லி: தனக்கு என்ன நடந்தாலும் அதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் காரணமாக இருக்க முடியும் என்றும் அதிமுகவினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை அடித்து சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பா, அடுத்த அதிரடியாக முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் கூறி களேபரத்தை உருவாக்கினார் சசிகலா புஷ்பா எம்.பி. இதனால் அவர் அதிமுகவில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

அப்போது நான் எம்பி பதவியை ராஜினாமா செய்யவே மாட்டேன் என திட்டவட்டமாக கூறியிருந்தார் சசிகலா புஷ்பா. இதன் பின்னர் சசிகலா புஷ்பா மீது ஏராளமான புகார்கள் அடுத்தடுத்து எழுந்தன. இதில் அவரது வீட்டில் வேலைபார்த்த நெல்லை திசையன்விளையை சேர்ந்த பானுமதி என்பவர் தனது சகோதரி ஜான்சிராணியுடன் சேர்ந்து வந்து கடந்த சில தினங்களுக்கு தூத்துக்குடி எஸ்பி அலுவலக்தில் புகார் செய்தார்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா கூறியதாவது: என் மீது பொய்யான குற்றச்சாட்டை 2 பெண்கள் கூறியுள்ளனர். அவர்களை மிரட்டியே அந்த புகார்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக கடிதம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன.
என்னை பழிவாங்கவே இவ்வளவு செயல்களையும் அதிமுகவினர் செய்து வருகின்றனர். என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்த்து நிற்கும் வல்லமை எனக்கு உள்ளது. என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். எனக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களை எல்லாம் மாநிலங்களவையில் பதிவு செய்வேன். ஒரு பெண்ணை இவ்வளவு கஷ்டப்படுத்தவா ஒரு பெண்ணை தமிழக மக்கள் முதல்வராக தேர்தெடுத்துள்ளனர்.
எனக்கு என்ன நடந்தாலும் அதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதான் காரணமாக இருக்க முடியும். அதிமுகவினரே கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதிமுக-வில் இன்னும் பலர் குமுறி கொண்டு இருக்கிறார்கள் நான் வெளிப்படையாக பேசிவிட்டேன். இவ்வாறு சசிகலா புஷ்பா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications