ஜெ.வுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதா? பாதிக்கச் செய்தனரா? சிபிஐ விசாரணை தேவை- சசிகலா புஷ்பா
டெல்லி: முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை இயல்பாகவே பாதிக்கப்பட்டதா? அல்லது அவருக்கு பின்னால் இருந்த கும்பலால் உடல்நலம் இல்லாமல் ஆக்கப்பட்டாரா? என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா கூறியதாவது:
மெட்ரோ ரயில் விழாவில் கூட முதல்வர் ஜெயலலிதா நன்றாகத்தான் இருந்தார்.. ஆனால் திடீரென நீர்ச்சத்து குறைபாடு என கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சிபிஐ விசாரணை
நீர்ச்சத்து குறைபாடு எனில் எதனால் வந்தது? ஜெயலலிதாவுக்கு பின்னால் இருந்து 2 மாத காலம் கவனித்த ரிப்போர்ட் என்ன? ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட மருந்து மாத்திரைகள் என்ன? ஏன் இந்த நிலைமை உருவானது என்பதற்கு சிபிஐ விசாரணை தேவை.

உடல்நலம் இல்லாமல் போனதா?
ஜெயலலிதாவுக்கு தானாகவே உடல்நலம் சரியில்லாமல் போனதா? இல்லை பின்னால் இருந்த கும்பலால் உடல்நலம் இல்லாமல் ஆக்கப்பட்டாரா? இந்த விஷயத்தை தொண்டர்கள் வேதனையுடன் பார்க்கிறார்கள்.

அன்று வெளியேற்றினார் ஜெ.
ஏற்கனவே 2011-ம் ஆண்டு சசிகலா நடராஜன் உட்பட 16 பேரை ஜெயலலிதா கட்சியில் இருந்து வெளியேற்றினார். அவர்கள் எதற்காக வெளியேற்றப்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரியும். என் ஆட்சியை கவிழ்ப்பதற்கு எனக்குப் பின்னால் இருந்து துரோகம் செய்தார்கள்... சதி செய்து ஆட்சியைக் கலைக்கப் பார்த்தனர் என்றெல்லாம் ஜெயலலிதா துரோகக் குற்றச்சாட்டு வைத்தார்.

மீண்டும் சதியா?
அவர்களில் சிலரை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்தார். மீண்டும் இப்போது 2016-ல் அப்படி ஏதேனும் சதி செய்யப்பட்டதா? என்ற கவலை தொண்டர்கள் மத்தியிலும் எனக்கும் எழுந்துள்ளது.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.












Click it and Unblock the Notifications