ஜெ.வுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமியுடன் கை கோர்க்கும் சசிகலா புஷ்பா
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துக் கொண்டிருக்கும் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா தற்போது பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியின் ஆலோசனைகளை கேட்டு வருவதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.
அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக டெல்லிக்குப் போன சசிகலா புஷ்பா பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து தமக்கான ஒரு லாபியை உருவாக்கிக் கொண்டார். அப்படித்தான் திமுக எம்பியான திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார் சசிகலா புஷ்பா.
இருவருக்குமான பணப் பரிமாற்றத்தில் பஞ்சாயத்து நடக்க அதுதான் டெல்லி விமான நிலையத்தில் பகிரங்க மோதலானாதாகவும் கூறப்படுகிறது. சிவாவை டெல்லி விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா தாக்கியது குறித்து ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் விசாரணை நடத்தி பதவியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார்.

கனிமொழி, குலாம்நபி ஆதரவு
ஆனால் ஜெயலலிதாவின் உத்தரவை மதிக்காமல் அவர் தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் பகிரங்கமாக புகார் கூறினார். அப்போது திமுகவின் கனிமொழி, காங்கிரசின் குலாம்நபி ஆசாத் ஆகியோர் சசிகலா புஷ்பாவை ஆதரித்து பேசினர்.

முன்ஜாமீன் மனு
இந்த நிலையில் தமிழகத்தில் சசிகலா புஷ்பா மீது அடுத்தடுத்து புகார்கள் வர வழக்குகளும் பதியப்பட்டன. இதனால் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் சசிகலா புஷ்பா.

இடைக்கால தடை
இம்மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வரும் 22-ந் தேதி வரை சசிகலா புஷ்பாவ கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது. இதனிடையே டெல்லியிலும் தமிழகத்திலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு தமக்கு ஆதரவு தருமாறு சசிகலா புஷ்பா கேட்டு வருகிறார்.

சு.சுவாமி ஆதரவு
பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியின் ஆலோசனைப்படிதான் இப்படியான ஆதரவை கோரி வருகிறாராம் சசிகலா புஷ்பா. சசிகலா புஷ்பாவை பயன்படுத்தி ஜெயலலிதாவுக்கு எதிரான பிரசாரத்தை ஊதி பெருக்குவது என்பதுதான் சுப்பிரமணியன் சுவாமியின் திட்டமாம்... சசிகலா புஷ்பாவும் சுப்பிரமணியன் சுவாமியின் ஆதரவு தமக்கு பெரும் பலம் என நம்புகிறாராம்.
இதனால் சு.சுவாமியின் ஆலோசனைகளை ஒரு சிஷ்யை போல பணிவோடு ஏற்று ஜெயலலிதாவுக்கு எதிரான தீவிரமாக இறங்க முடிவு செய்துள்ளாராம் சசிகலா புஷ்பா.












Click it and Unblock the Notifications