பாலியல் வழக்கு.. சசிகலா புஷ்பாவின் அம்மாவுக்கு முன்ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சசிகலா புஷ்பாவின் தாயார் கெளரிக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
டெல்லி: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் தாயார் கெளரிக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. பாலியல் வன்முறை வழக்கில் அவரை கைது செய்ய 6 வார காலத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. ஆனால் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்ய முடியாது என பிடிவாதமாக இருந்து வருகிறார். இதனிடையே சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாயார் கெளரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த 2 பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சசிகலா புஷ்பா உள்ளிட்ட 4 பேரும் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 14-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை கடந்த செப். 26-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா புஷ்பாவை கைது செய்ய 6 வாரங்களுக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி, புதுக்கோட்டை காவல் நிலையங்களில் சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது
இந்நிலையில், சசிகலா புஷ்பாவின் தாயார் கெளரி சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி டி.எஸ். தாகுர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் கௌரி சார்பில் வழக்கறிஞர் டி. அபினவ் ராவ் ஆஜராகி, "சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோருக்கு எதிராக தமிழகத்தில் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் அவரை கைது செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே புகார்களில் சசிகலா புஷ்பாவின் தாயார் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
எனவே, அவர் மீதும் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவு, மனுதாரர் கௌரிக்கும் பொருந்தும்' என்று உத்தரவிட்டனர்.