சொத்துக் குவிப்பு வழக்கில் என்னை தண்டிக்க முடியாது... சரியான பாய்ண்ட் பிடித்த சசி!
சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு ஊழியராக இல்லாததால் தம்மை தண்டிக்க முடியாது என்று சசிகலா தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு ஊழியராக இல்லாததால் தம்மை தண்டிக்க முடியாது என்று சசிகலா தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1991-96-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. சென்னை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றால் வெளிப்படைத்தன்மை இருக்காது என்பதால் அந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற திமுகவின் க.அன்பழகன் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து இந்த வழக்கானது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. பெங்களூரு நீதிமன்றத்தில் 20 ஆண்டுகாலம் இந்த வழக்கு நீடித்தது.

நீதிபதி குன்ஹா தீர்ப்பு
2014-இல் நீதிபதி குன்ஹா முன்பு அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா ரூ.10 கோடியும் அபராதமாக விதித்து குன்ஹா தீர்ப்பளித்தார்.

கர்நாடகா ஹைகோர்ட்டில் அப்பீல்
இதை எதிர்த்து கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த தனி நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்தார். ஆனால் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

ஜெயலலிதா மரணம்
அந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் ஜெயலலிதா காலமாகிவிட்டார். எனினும் அதன் தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி வெளியானது. அதில் குன்ஹா அளித்த தீர்ப்பு சரியே என்றும் ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் அவரை இந்த தண்டனையிலிருந்து விடுவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, ஏனைய மூவரின் தண்டனையையும், அபராதத்தையும் உறுதி செய்தார்.

மறுசீராய்வு மனு
இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டரை மாதங்கள் ஆன நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மூவரும் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்..

மனுவில் என்ன?
இந்த மனுவில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தம்மை தண்டிப்பதற்கு தான் ஒன்றும் அரசு ஊழியர் அல்ல என்றும் அந்த சட்டமானது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கே பாடம் எடுத்துள்ளார் சசிகலா.












Click it and Unblock the Notifications