நேபாள பெண்கள் பலாத்கார வழக்கு: டெல்லி போலீஸ் கைக்கு மாறுகிறது?
டெல்லி: வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான நேபாள பெண்கள் வழக்கு விசாரணை டெல்லி போலீசுக்கு மாற்றப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் இயங்கி வரும் சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு, குர்கானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடுகள் உள்ளன. அதில் சவுதி தூதர் ஒருவரின் இல்லத்திற்கு நேபாளத்தில் இருந்து வீட்டு வேலைக்காக இரண்டு பெண்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால், அப்பெண்களை சவுதி தூதரும் அவரது நண்பர்களும் சேர்ந்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தும், அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளனர்.
சமீபத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் அப்பெண்கள் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக குர்கான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வெளியுறவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக நேபாள தூதரகத்தின் உதவியையும் அவர்கள் நாடியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை வழங்குமாறு குர்கான் போலீசாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டு உள்ளது. அதன் அடிப்படையில் அந்த தூதர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
ஆனால், நேபாள பெண்களின் இந்தக் குற்றச்சாட்டை சவுதி தூதரகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் சவுதி தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.
இதற்கிடையே, வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகளை சந்தித்த சவுதி தூதர் தனது வீட்டிற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்தது, தூதரக மரபுகளுக்கு எதிரானது என கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையானது குர்கான் போலீசிடம் இருந்து டெல்லி போலீசாருக்கு மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசிடம் ஆலோசிக்காமல் இது தொடர்பாக அடுத்தடுத்த நடவடிக்கைகளில் குர்கான் போலீசார் ஈடுபட்டது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தூதர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மத்திய அரசின் ஆலோசனையின்படியே போலீசார் செயல்பட்டிருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால் சவுதி மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என மத்திய அரசு நினைக்கிறதாம்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட இரு பெண்களும் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டது மருத்துவ அறிக்கையில் நிரூபணமாகியுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில் தூதருக்கு எதிரான சாட்சியங்களை சவுதி அரசிடம் இந்தியா சமர்ப்பிக்கவுள்ளது. தூதருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சாட்சியங்கள் இருப்பதையும் சவுதி அரசிடம் இந்தியா தெரிவிக்கவுள்ளதாம்.
அதேசமயம், தூதரக அதிகாரி குற்றம் செய்திருந்தது நிரூபணமானால் அவரை இந்திய சட்டத்தின் கீழ் தண்டிப்பதை சவுதி அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவரை சவுதிக்கு வரவழைத்து அங்கு தண்டனை தர அது விரும்புகிறதாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை சவுதியைப் பகைத்துக் கொள்ள அது விரும்பாது. சவுதியைப் பகைத்துக் கொண்டால் பல சங்கடங்களை சர்வதேச அளவில் இந்தியா சந்திக்க நேரிடும். அது பல சிக்கல்களுக்கும் வழி வகுக்கும் என்பதால் இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலை இரு தலைக் கொள்ளி எறும்பு போல உள்ளது.