காவிரியில் நீர் திறந்துவிடக் கோரும் தமிழக மனு மீது உடனே விசாரணை இல்லை: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரும் தமிழக அரசு மனுவை உடனே விசாரணைக்கு ஏற்க முடியாது; தீபாவளி விடுமுறைக்குப் பின்னர் விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் தாக்கல் செய்த மனு மீது பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நடுவர்மன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்து வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்துக்கு தர வேண்டிய 45 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அண்மையில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் மனுவுக்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் தீபாவளி விடுமுறைக்குப் பின்னர் தமிழக அரசு மனு மீது விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டது.