உடல்நலம் பாதிக்கப்பட்ட இத்தாலி கடற்படை வீரர் தாய்நாடு செல்ல அனுமதி
டெல்லி: கேரள மீனவர்களை சுட்டுகொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலி வீரர் மிஸிமிலியானோ மருத்துவ சிகிச்சைக்காக தாய்நாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கேரள மீனவரை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் மஸ்சிமிலியானோ லத்தோர் என்பவர் நரம்பு நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக 2 மாதங்கள் இத்தாலி செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி கடற்படை வீரர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ் நரசிம்மாவுக்கு உத்தரவிட்டது.
இன்று இவ்வழக்கில் பதில் அளித்த மத்திய அரசு, மிஸிமிலியானோ இத்தாலி செல்ல தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தது. இதையடுத்து, மிஸிமிலியானோ லட்டோருக்கு சிகிச்சை பெற இத்தாலி செல்ல 4 மாதம் காலம் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.