மணிப்பூரில் நடந்த 1,528 என்கவுண்ட்டரும் போலியானவையா? விசாரிக்க சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!!
டெல்லி: மணிப்பூரில் இதுவரை நிகழ்த்தப்பட்ட 1,528 என்கவுண்ட்டர்களும் போலியானவையா என ராணுவம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் தனிநாடு கோரியும் சுயாட்சி கோரியும் பல்வேறு ஆயுதமேந்திய குழுக்கள் இயங்கி வருகின்றன. இதனால் அம்மாநிலத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் அமலில் உள்ளது.

இச்சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்திதான் மனித உரிமை போராளி இரோம் சர்மிளா பல ஆண்டுகளாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். இச்சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்கவும் வைத்தது.
இதனிடையே இச்சட்டத்தை பயன்படுத்தி போலி என்கவுண்ட்டர்கள் நிகழ்த்தப்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது 2013ஆம் ஆண்டு மணிப்பூரில் நடத்தப்பட்ட 6 என்கவுண்ட்டர்கள் குறித்து விசாரணை நடத்திய குழு அந்த 6 என்கவுண்ட்டருமே போலியானவை என உறுதி செய்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.பி. லோகுர், ஆர்.கே. அகர்வால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ராணுவம் தமக்கு உரிய சிறப்பு அதிகாரங்களை தவறாக பயன்படுத்த முடியாது என்று கூறினர். மேலும் மணிப்பூரில் நிகழ்த்தப்பட்ட 1,528 என்கவுண்ட்டர்களும் போலியானவை என்பது குறித்து ராணுவமே உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications