உத்தரகாண்ட் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவு- முடிவுகளை சுப்ரீம்கோர்ட் வெளியிடும்!
டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபையில் உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு பார்வையாளர்கள் முன்னிலையில் முதல்வர் ஹரீஷ் ராவத் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகளை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று வெளியிடும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டனர். அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஹரீஷ் ராவத் அரசுக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் ஹரிஷ் ராவத் பேரம் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை காரணம் காட்டி அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து ஹரீஷ் ராவத் தொடர்ந்த வழக்கில் ஜனாதிபதி ஆட்சிக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவு
இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அம்மாநில சட்டசபையில் ஹரீஷ் ராவத் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட்டது. அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சிறப்பு பார்வையாளர்களாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான முதன்மை செயலர் ஜெய்தேவ்சிங் மற்றும் உத்தரகாண்ட் சட்டசபை செயலர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி ஆட்சி தளர்வு
மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் இன்று உத்தரகாண்ட் சட்டசபையின் சிறப்பு கூட்டம் காலை 11 மணிக்கு கூடியது. இதற்காக அம்மாநிலத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜனாதிபதி ஆட்சி சில மணிநேரங்கள் தளர்த்தப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு
சட்டசபை கூடிய உடன் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டது. பின்னர் பகல் 12 மணியளவில் சபை நடவடிக்கைகள் முடிவடைந்தன. உத்தரகாண்ட் சட்டசபையில் தற்போதைய மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 61. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 27 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 32 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பி.டி.பி., கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் ஹரீஷ் ராவத்துக்கு ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது.

வெற்றி களிப்பில் ஹரீஷ் ராவத்
இக்கூட்டத் தொடர் முடிந்து வெளியே வந்த பாஜக எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி, ஹரீஷ் ராவத் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுவிட்டார். அவர் 12 எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்து வாக்களிக்க வைத்திருக்கிறார். பணபலத்திடம் ஜனநாயகம் தோற்றுவிட்டது என்றார். இதேபோல் ஹரீஷ் ராவத் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வெற்றி புன்னகையுடன் சட்டசபையை விட்டு வெளியே வந்தனர். இருந்தபோதும் உச்சநீதிமன்றமே இறுதி முடிவை தெரிவிக்கும் என்பதால் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என கூறிவிட்டனர். உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் அஜய் பட் கூறுகையில், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராகவே வாக்களித்தனர் என்றார்.

வெள்ளியன்று முடிவுகள் அறிவிப்பு
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை விவகாரங்களுக்கான முதன்மை செயலாளர் மேற்பார்வையில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பின் விபரத்தை அறிக்கையாக தயாரித்துள்ள சிறப்பு பார்வையாளர்கள் அதை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர். இந்த முடிவுகளை வரும் வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன்றம் அறிவிக்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications